நாட்டில் வாகன இறக்குமதிகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது நாட்டின் பொருளாதாரம் சுருங்குவதற்கோ (Allow economy to contract) அரசாங்கத்திற்கு எவ்வித நோக்கமும் இல்லை என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (22) திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் தனிநபர் சொகுசு வாகன இறக்குமதி மீது அறிவிக்கப்பட்ட 50 சதவீத கூடுதல் வரி விதிப்பானது (Surcharge), நாட்டில் அதிகரித்து வரும் அமெரிக்க டொலரின் மாற்று விகித அழுத்தத்தைத் தற்காலிகமாகத் தணிப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாத்திரமே என அனில் ஜயந்த பெர்னாண்டோ விவரித்துள்ளார். தனிநபர் வாகனங்களின் இறக்குமதியை சில மாதங்களுக்கு ஒத்திவைப்பதே இதன் நோக்கமே தவிர, இறக்குமதிகளை ஒட்டுமொத்தமாகத் தடுப்பது இதன் நோக்கமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த புதிய அரசாங்கக் கொள்கையைச் சில நுகர்வோரும் வர்த்தகர்களும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதி அமைச்சர், இக் கூடுதல் வரி விதிப்பால் வாகனங்களின் சந்தை விலை தானாகவே 50 சதவீதத்தால் உயர்ந்துவிடும் என அவர்கள் தவறாகக் கருதியுள்ளனர் என்றார்.
“இத்தகைய தவறான புரிதல் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக, சந்தையில் தற்காலிகமாக மிக அதிக விலைக்கு வாகனங்கள் விற்கப்படுவதாகவும், நுகர்வோர் விபரமறியாமல் அப் பெருந்தொகையைச் செலுத்தி வாகனங்களை வாங்குவதாகவும் எமக்கு உத்தியோகபூர்வத் தகவல்கள் கிடைத்துள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறையானது, முறையான தரவுகள் மற்றும் உண்மைகளின் அடிப்படையிலான கொள்கை முடிவுகள் (Fact‑based policy decisions) மூலமாகவே வெளிநாட்டுச் செலாவணி அழுத்தங்களை நிர்வகிப்பதாகும் என அனில் ஜயந்த பெர்னாண்டோ கோடிட்டுக் காட்டியுள்ளார். அத்துடன், வாகன சந்தையையும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கக்கூடிய சந்தை ஊகங்கள் (Speculation) மற்றும் போலித் தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.