வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு கண்டித்து, வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக, வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்துக்கு முன்பாக இன்று (29) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்துக்கு முன்னிருந்து மன்னார் வீதி வழியாக சென்று, காமினி மகா வித்தியாலயத்துக்கு முன்பாக நின்று பல்வேறு கோரிக்கைகள், குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கோசங்களை எழுப்பியிருந்தனர்.

வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்ட தகவல் அறிவிக்கப்பட்டது. அத்துடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் பறிக்கப்பட்டது.
இதனை கண்டித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ”ஆளுநரே ஜனநாயக படுகொலையை நிறுத்து”, “ஜே.வி.பியின் முகவராக ஆளுநரே செயற்படாதே”, “பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள காட்சிக்கு மாநகர சபையிடம் காணி உரிமம் உண்டா?”, “மக்கள் ஆணைக்கு மதிப்பளி”, “தையிட்டியில் பாராமுகம்; மாநகர சபையில் பழிவாங்கலா”, “ஊழல் அறிக்கையை வெளிப்படுத்து” முதலான பல்வேறு வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததுடன், பல விடயங்களை சுட்டிக்காட்டி கோசம் எழுப்பினர்.