மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
அதன்படி, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மரங்களுக்கு அடியில் நிற்காமல், பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் தஞ்சமடையுங்கள்.
வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும்.
இடியுடன் கூடிய நேரங்களில் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதையும், மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.
சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். வீழ்ந்து கிடக்கும் மரங்கள் மற்றும் மின்சாரக் கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.
ஏதேனும் அவசர உதவி தேவைப்படின், உடனடியாக பிரதேசத்திற்குரிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.