வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக, கடந்த 48 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் ஆடுகள் கோழிகள் உயிரிழந்துள்ளன. இது வெறும் விலங்குகளின் இழப்பு மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கிராமியப் பொருளாதாரத்தின் முழுமையான வீழ்ச்சியாகும். என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (5) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இல் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அண்மைய காலநிலை பேரழிவைத் தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் குறிப்பாக மன்னார். முல்லைத்தீவு வவுனியா,கிளிநொச்சி,மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாரதூரமான நெருக்கடி நிலை குறித்து, விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் அவசர கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
நாடு பயிர்ச் சேதங்கள் குறித்து கவனம் செலுத்தி வரும் வேளையில்,எமது கால்நடை விவசாயம் மீது ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சிய மழை காரணமாக, 48 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் ஆடுகளும் மற்று கோழிகள் உயிரிழந்துள்ளன. இது வெறும் விலங்குகளின் இழப்பு மட்டுமல்ல, ஆயிரக்கணக்க குடும்பங்களின் கிராமியப் பொருளாதாரத்தின் முழுமையான வீழ்ச்சியாகும்.
ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக் மாடுகள் மற்றும் எருமைகளும், மற்றும் ஆடுகளும் உயிரிழந்துள்ளன.இறப்புக்கு சராசரி வெப்பநிலையை விட கணிசமாகக் குறைந்த கடும் குளிர் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் இருந்த கால்நடைகளுக்குப் போதிய தங்குமிட வசதி இல்லாமையுமே இதற்குக் காரணம் என கால்நடை மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
நீண்டகால பால் உற்பத்தி இழப்பைத் தவிர்த்து,நேரடியாக கால்நடைகளின் பெறுமதி மட்டும் சுமார் 150 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.எனவே உயிரிழந்த கால்நடைகள் குறித்து அமைச்சு முறையான கணக்கெடுப்பை நடத்தி,ஒரு தெளிவான தரவுத் தொகுப்பை உருவாக்கியுள்ளதா?
வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மாடு மற்றும் எருமை உரிமையாளர்கள் கோழிபாண்ணையாளர்களுக்கும், அதேபோல் தொடர்புடைய பண்ணை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அமைச்சு எவ்வளவு இழப்பீடு வழங்கியுள்ளன? ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் விவசாயிகளுக்கு, உயிரிழந்த ஒவ்வொரு கால்நடைக்கும் உடனடி இழப்பீட்டுத் தொகுப்பை வழங்க அரசாங்கம் முன்வருமா?
பலவீனமான நிலையில் இருக்கும் எஞ்சிய கால்நடைகளுக்கு அவசர விற்றமின்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்க கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இது போன்ற அனர்த்தங்களுக்கு உள்ளாகும் வடக்கு மேய்ச்சல் நிலங்களில், வானிலையைத் தாங்கக்கூடிய கால்நடைத் தொழுவங்களை அமைப்பதற்கு மானியங்களை வழங்க அரசாங்கம் நீண்டகாலத் திட்டத்தைக் கொண்டுள்ளதா?இந்த விவசாயிகளே எமது குழந்தைகளின் பசியைத் தீர்க்கும் பாலை வழங்குகிறார்கள். அவர்கள் தம்மால் கையாள முடியாத ஒரு காலநிலை பேரழிவினால் மேலும் கடனாளிகளாக மாற நாம் அனுமதிக்க முடியாது என்றார்.