வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் காலத்தில் பொறுப்பேற்கப்பட்டு, தற்போது பாதுகாப்புத் தேவைகளுக்கு மேலும் அவசியமில்லை என அடையாளம் காணப்பட்டுள்ள நிலங்களை விடுவித்து மீண்டும் ஒப்படைக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களால் பயன்படுத்தப்பட்ட அரச நிலங்களைச் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மீண்டும் ஒப்படைப்பதை விரைவுபடுத்துவது தொடர்பாக நேற்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை விடுத்தார்.
தேசிய பாதுகாப்பே முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, இராணுவ முகாம்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு கட்டமைப்புகள் எங்கு தேவை என்பதைத் தீர்மானிப்பது முப்படைகள், பொலிஸார் மற்றும் ஏனைய தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தேவைகளின் அடிப்படையில், எந்தெந்த நிலங்களை விடுவிக்க முடியும், எவற்றை பாதுகாப்பு நோக்கங்களுக்காக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எட்டுமாறு அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
பாதுகாப்பு நோக்கங்களுக்கு அத்தியாவசியமான நிலத்தின் அளவைத் தீர்மானிக்கும்போது மக்கள் மைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறும், மக்களுக்குத் திரும்ப வழங்கக்கூடிய அதிகபட்ச நிலப்பரப்பை விடுவிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார். நிலங்களை மீண்டும் வழங்குவதுடன் மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளையும் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இதன்படி, அதிக உற்பத்தித் திறனை அடையக்கூடிய மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நவீன விவசாய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு விவசாய, கால்நடை, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி திசாநாயக்க பணிப்புரை வழங்கினார்.