வங்கதேசத்தில் முஸ்லிம் மதத்திற்கு எதிராக வெறுப்பு கருத்துக்கள் பரப்பியதாக ஹிந்து இளைஞர் சமீபத்தில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அவர் மத வெறுப்பை பரப்பியதற்கு நேரடி ஆதாரங்கள் ஏதுமில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தின் மைமென்சிங் நகரை சேர்ந்தவர் ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ், 27. இவர் அங்கு உள்ள ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவாமி லீக் கட்சியினரால் சுடப்பட்ட வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி இறந்த செய்தி கடந்த 18ம் தேதி இரவு வெளியானது.இதையடுத்து வங்கதேசத்தின் பல நகரங்களில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தை பயன்படுத்தி மைமென்சிங் நகரில் ஒரு கும்பல் திபு சந்திர தாஸை அடித்து கொன்றது.
மேலும், நுாற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அவரின் உடலை மரத்தில் கட்டி தீயிட்டு எரித்தது. அவர் முஸ்லிம் மதத்திற்கு எதிராக வெறுப்பு கருத்துகளை பரப்பியதாக அந்த கும்பல் கூறியது.இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட ஏழு பேரை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.
வங்கதேசம் முழுதும் நீடிக்கும் பதற்றம்: ஹிந்து இளைஞர் கொலையில் 7 பேர் கைது
இந்நிலையில், இந்த வழக்கு பற்றி வங்கதேச போலீஸ் உயரதிகாரி சம்சுஜமான் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:திபு சந்திர தாஸ், ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் மதவெறுப்பை துாண்டும் வகையில் பதிவு செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது ஒரு வதந்தியால் ஏற்பட்ட கொடூரச் செயல் எனத் தெரிகிறது. அவருடன் வேலை பார்த்தவர்களிடம் விசாரித்த போதும், திபு எந்த மத வெறுப்பு கருத்துக்களையும் கூறி கேட்டதில்லை என தெரிவித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.