ரொறன்ரோவின் நோர்த் யோர்க் (North York) பகுதியில் இருந்து 14 வயதுடைய சிறுமியொருவர் காணாமல் போய் ஒரு வாரத்திற்கும் மேல் கடந்துள்ள நிலையில், அவரைத் தேடிக் கண்டறிவதற்காக ரொறன்ரோ பொலிஸார் புதிய புகைப்படமொன்றையும், தகவல் வழங்குவதற்கான பிரத்தியேக இணையதளப் பக்கமொன்றையும் அவசரமாக வெளியிட்டுள்ளனர்.
அனைவராலும் அன்பாக ‘எஸ்டி’ (Esti) என்று அழைக்கப்படும் எஸ்தர் என்ற இந்தச் சிறுமி, கடந்த மே 16 ஆம் திகதி நள்ளிரவு 12:30 மணியளவில் ‘ஹைவே 401’ இற்கு சற்றுத் தெற்கே உள்ள ‘பாத்தர்ஸ்ட் வீதி’ (Bathurst Street) மற்றும் ‘ஹொட்ஸ்பர் வீதி’ (Hotspur Road) சந்திப்பிற்கு அருகில் கடைசியாகக் காணப்பட்டுள்ளார்.
அதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னர், அதாவது மே 15 ஆம் திகதி இரவு 11:30 மணியளவில் ‘பாத்தர்ஸ்ட் வீதி’ மற்றும் ‘ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட்’ சந்திப்பிற்கு அருகில் உள்ள ‘ஏர்ல் பேல்ஸ் பூங்கா’ (Earl Bales Park) பகுதியில் அவர் நடமாடியுள்ளார். அங்கிருந்து அவர் வடகிழக்கு திசையை (Northeasterly direction) நோக்கி நடந்து சென்றதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல் போயுள்ள எஸ்தர், 5 அடி 2 அங்குலம் உயரமும், நடுத்தர உடல்வாகுகும், பழுப்பு நிறத் தலைமுடியும் கொண்டவர் என விபரிக்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாகக் காணப்பட்ட போது, முன்பக்கத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீலப்பச்சை நிற (Turquoise) சுவெட்டர், சாம்பல் நிற ஸ்வெட்பேண்ட்ஸ் (Grey sweatpants) ஆகியவற்றை அணிந்திருந்ததுடன், காலணிகள் (Shoe) எதையும் அணிந்திருக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், காணாமல் போயுள்ள இச் சிறுமி ‘ஆட்டிசம்’ (Autism spectrum) எனப்படும் மனவளர்ச்சிக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிறுமியின் குடும்பத்தினருடன் இணைந்து இச் சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் புலனாய்வாளர்கள், எஸ்தரின் பாதுகாப்பு குறித்து தங்களின் பலத்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், முதலாம் கட்ட அவசரத் தேடுதல் நடவடிக்கையை (Level One search) முடுக்கிவிட்டுள்ளனர்.
இச் சிறுமியைக் கண்டறிய உதவக்கூடிய ஏதேனும் விபரங்கள் அல்லது தகவல்கள் தெரிந்த பொதுமக்கள், உடனடியாக 647-355-4148 என்ற இலக்கத்தின் ஊடாகப் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு அல்லது இணையதளம் ஊடாகத் தெரிவிக்குமாறும் ரொறன்ரோ பொலிஸார் அவசரமாகக் கோரியுள்ளனர். அத்துடன், சிறுமி தொடர்பான விபரங்களை விரைவாகப் பகிர்வதற்காகப் பிரத்தியேக ‘QR’ குறியீடு ஒன்றையும் பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.