சென்னை
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு மிக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது! தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இன்றும் நாளையும் (ஆகஸ்ட் 08 மற்றும் 09) கைரேகை பதிவு (eKYC) செய்வதற்கான சிறப்பு முகாம் மாபெரும் அளவில் நடைபெற உள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-இன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக, மின்னணு குடும்ப அட்டையில் (Smart Card) இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி இப்பணியைச் செய்திட, கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கைரேகை சரிபார்ப்புப் பணி தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக, தற்போதைய நிலவரப்படி சுமார் 95.86 சதவீத eKYC பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
இந்த eKYC பதிவினை 100 சதவீதம் முழுமையாக நிறைவு செய்யும் நோக்கில்தான், இதுவரை பதிவு செய்யாதவர்களுக்காக இந்தச் சிறப்பு முகாம் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று (08.08.2026) மற்றும் நாளை (09.08.2026) ஆகிய இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
எனவே, இதுவரை நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு (eKYC) செய்யாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும், தங்களது அருகிலுள்ள ரேஷன் கடைகளில் நடைபெறும் இந்தச் சிறப்பு முகாமினைத் தவறாமல் பயன்படுத்தி, உடனடியாகத் தங்களது eKYC பதிவினை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
#TNRationShop #eKYCUpdate #TamilNaduNews #RationCardTN #Chennai #LatestNewsTN #TrendingTN #TNNewsUpdates #SmartCardTN #TNGovernment #PublicAnnouncementTN