தமக்கு நீதிவேண்டிப் யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகப் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தாய்மார் பொலிஸாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையையும், அவற்றை உள்ளே இருந்தவாறு கையடக்கத்தொலைபேசி ஊடாகப் பார்த்துக்கொண்டிருந்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் செயலையும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் செவ்வாய்க்கிழமை (25) யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் பொலிஸாரினால் இழுத்துச்செல்லப்பட்டு மாவட்ட செயலகத்துக்கு வெளியே தள்ளிவிடப்பட்டனர்.
அதுமாத்திரமன்றி பேஸ்புக் வாயிலாக ஒளிபரப்பப்பட்ட இந்தப் போராட்டக் காணொளியை நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மாவட்ட செயலகத்துக்குள் இருந்தவாறு அவரது கையடக்கத்தொலைபேசியில் பார்வையிடும் புகைப்படமொன்றும் பேஸ்புக்கில் பரவலாகப் பகிரப்பட்டு பலரதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து கடும் கண்டனம் வெளியிட்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ‘வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தாய்மார் நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்திலிருந்து பொலிஸாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி, ‘இந்தச் சம்பவங்களை மாவட்ட செயலகத்துக்குள் இருந்து தனது கையடக்கத்தொலைபேசி ஊடாகப் பார்த்துக்கொண்டிருந்த நீதியமைச்சர் எனக் கூறப்படுபவரின் செயலையும், இவற்றை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர்களை பகிரங்கமாக தாக்கிப்பேசிய அமைச்சர் சந்திரசேகரனின் செயலையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்’ என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களைப் போலவே செயற்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளார்.
மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகக் கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளகக் கட்டமைப்புக்களில் நம்பிக்கை இழந்திருப்பதாகவும், சுயாதீன சர்வதேச நீதிப்பொறிமுறையே அவர்களது கோரிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இப்போராட்டம் குறித்துக் கருத்துரைத்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், ‘வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் பல வருடங்களாக இடம்பெற்று வருகிறது. ஆனாலும் இந்தப் போராட்டம் ஏன் அந்த உறவுகளின் போராட்டமாக மட்டுமே இன்னமும் இருக்கிறது? தன் ஒற்றை உறவைத் தேடி அலையும் இந்த அம்மா இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையையே கோரி நிற்கிறார்.
இந்தப் போராட்டத்தினை இந்த அம்மாவுடன் நாங்கள் எங்கள் வசதிக்காக மட்டுப்படுத்திக்கொள்ளலாம். ஆனாலும் அறம் சார்ந்து நிற்கும் இந்த அம்மாவின் போராட்டம் எம் இனத்தின் விடுதலைக்கானது என்பதை உணர மறுக்கிறோம். இந்த அம்மா எங்களுக்காகவுமே போராடுகிறார். சிங்கள பௌத்த பேரினவாத இலங்கை அரசினால் எங்களது இன்னுமொரு உறவு காணாமலாக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே உரத்துக் குரல் கொடுக்கிறார்.
‘இவர்கள் தெருவில் நின்று போராடுவதனால் தான் எங்கள் இழப்புக்களும் வலிகளும் இன்னமும் உயிர்ப்புடன் உலக அரங்கில் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. போராட்டக்காரர்களின் எண்ணிக்கையில் தங்கியிருப்பது அல்ல போராட்டம். இனமாக ஒன்றிணைவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.