இந்தியாவின் 5 மாநிலங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த துவிச்சக்கரவண்டி பயணக் குழுவினர், அங்குள்ள மக்களின் வரவேற்பு மற்றும் பிரதேசத்தின் அழகு குறித்துத் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 40 பேர் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர்.
‘போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகிய தொனிப்பொருள்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவர்கள் கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்தனர்.
வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தின் அழகு மற்றும் மக்களின் உபசரிப்பு தங்களுக்குப் பெரிதும் பிடித்திருப்பதாகவும், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இங்கு சுற்றுலா வருமாறு ஊக்குவிக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் அக்குழுவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நிலையான எரிபொருள் விநியோகத்தைப் பேணும் நோக்கில், முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் இருப்புக்களை வழங்க சீனா முன்வந்துள்ளது.
சீன தூதர் கி சென்ஹாங் (Qi Zhenhong), ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து, இலங்கையின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் ஆதரவளிக்க உறுதி அளித்தார்.
சீனாவிலிருந்து முதலாவது எரிபொருள் கப்பல் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ‘சினோபெக்’ (Sinopec) நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளுக்கு மேலதிகமாக வழங்கப்படும் ஒன்றாகும்.