நடுத்தர மக்கள் கொள்வனவு செய்யும் மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை அரசாங்கம் குறைக்க வேண்டும் என சிலோன் மோட்டார் வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சிலோன் மோட்டார் வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் அண்மையில் நிலவிய இயற்கை அனர்த்தங்களுக்கு பின்னர் வாகன கொள்வனவு வீதம் சடுதியாக குறைவடைந்துள்ளது. வாகன இறக்குமதிக்காக முன்பதிவுகள் செய்தவர்கள் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே அவர்கள் பதிவுகளை இரத்துச் செய்துள்ளார்கள்.
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை குறித்த காலப்பகுதிக்குள் விடுவிக்காவிடின் காலமாதம் என்று குறிப்பிட்டு 3 சதவீதமளவில் வரி அறவிடப்படுகிறது. தற்போதைய இக்கட்டான நிலையில் இந்த வரி அறவிடலை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.
நடுத்தர மக்களின் மோட்டார் வாகன கொள்வனவு கனவு பாதிக்கப்பட்டுள்ளது. வெகனார் ரக வாகனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள வரி 40 இலட்சம் ரூபா வரையில் காணப்படுகிறது. ஆகவே இந்த வரிகளை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.