மோசடி குற்றப் பத்திரம் கையளிக்கப்படவிருப்பது தெரிந்தும் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் இந்த மோசடியின் பங்கு அனைவருக்கும் கிடைத்திருக்க வேண்டும். அத்துடன் வலசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் அமைச்சரவை பாதுகாக்க வாக்களிக்கும் அனைவரும் ஊழல் மோசடிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களாகும். அவர்களை நாட்டு மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரம் குறைந்த நிலக்கரி மோசடி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரம் கையளிக்க இருக்கிறது. பிரபல அமைச்சு ஒன்றின் அமைச்சருக்கு எதிராக ஊழல் தொடர்பில் சாட்சி இருப்பதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்த பின்னர், அவ்வாறான குற்றச்சாட்டுக்குள்ளான வலுசக்தி போன்ற பொறுப்புவாய்ந்த அமைச்சின் அமைச்சராக தொடர்ந்தும் அவரை வைத்திருப்பது உலக ஜனநாயக சம்பிரதாயங்களுக்கு பொருந்துவதில்லை.
குறிப்பாக உலக ஜனநாயகம் தொடர்பில் கதைத்துவந்த அநுரகுமார திசாநாயக்க போன்ற ஜனாதிபதியின் கீழ் இவ்வாறு இடம்பெறுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
மேலும் எரிபொருட்களின் விலை அசாதாரண முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் வாழ்க்கைச்செலவு பாரியளவில் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருட்கள் நாட்டுக்குள் வருவதற்கு முன்னரே எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த அமைச்சர் மேற்கொண்ட நிலக்கரி மோசடியின் பெறுபேறாகவே டீசலுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சாதாரண டீசல் இல்லாமையால் சுப்பர் டீசல் பயன்படுத்தியே மின் உற்பத்தி நிலையம் ஒன்று செயற்படுத்தப்படுகிறது. அமைச்சரின் நிலக்கரி மோசடியே இதற்கு காரணமாகும்.
மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்தே வாக்களித்தார்கள். திருடர்களை கைது செய்வார்கள் என்றே நம்பினார்கள். ஆனால் இன்று திருடர்கள் அரசாங்கத்தை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஊழல் நிறைந்த இந்த அரசாங்கத்தின் மோசடி காரணமாக மக்கள் எரிபொருட்களுக்கு மேலதிகமாக செலுத்த வேண்டி ஏற்பட்டிக்கிறது.
இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் மின் கட்டணம் அதிகரிப்பது உறுதியாகும். அரசாங்கத்தின் மோசடியே இந்த நிலைமைக்கு காரணமாகும். அரசாங்கத்தில் இருக்கும் பொய்யர்களும் திருடர்களும் இணைந்து நாட்டின் எதிரகாலம் தொடர்பில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
நிலக்கரி மோசடியானது எமது நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் பாரதூரமான மோசடியாகும். தரம் குறைந்த 9 கப்பல்களுக்கு ஏற்பட்ட நட்டம் 8.5 பில்லியன் ரூபாவாகும். 13ஆவது நிலக்கரி கப்பலும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கப்பலுக்கும் நேரடியாக 2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகிறது.
ஆனால் இதனால் மறைமுகமாக இடம்பெறுகின்ற நட்டம், பொருளாதாரத்துக்கு ஏற்படுகின்ற நட்டம் இன்னும் கணக்கிடப்படவில்லை. இதுதான் இந்த நாட்டில் இடம்பெற்ற பாரிய மோசடியாகும்.மோசடி குற்றச்சாட்டு பத்திரம் கையளிக்கப்பட இருப்பதை தெரிந்தும் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் இந்த மோசடியின் பங்கு அனைவருக்கும் கிடைத்திருக்கிறது என்றே நினைக்க வேண்டி இருக்கிறது.
அதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலசுக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்திருக்கிறோம். நம்பிக்கையில்லா பிரேரணையில் அமைச்சரை பாதுகாக்க வாக்களிக்கும் அனைவரும் ஊழல் மோசடிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களாகும். அவர்களை நாட்டு மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றார்.