கண்டி மெனிக்ஹின்ன நகரில் அமைந்துள்ள மூன்று மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றில், இன்று (ஏப்ரல் 22) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அக் கட்டிடம் முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளது.
மெனிக்ஹின்ன நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆடை விற்பனை நிலையம் ஒன்றிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ மிக வேகமாக பரவியதன் காரணமாக கட்டிடத்தில் இருந்த ஆடைகள் மற்றும் ஏனைய பொருட்கள் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளன. எனினும், உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கண்டி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் விரைவாகச் செயற்பட்டனர்.
தீயணைப்புப் படையினருடன் இணைந்து பிரதேச மக்களும் நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், மெனிக்ஹின்ன பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.