027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதற்கான ஆசிரியர் பயிற்சிகளும் வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் ஒன்றினை 2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும், அதற்காக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், ஒழுங்குமுறை அதிகாரசபையொன்றின் ஊடாக முன்பள்ளிகளைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அம்பலாந்தோட்டை பிரதேச சபை மண்டபத்தில் இன்று (15) நடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு தொடர்பான, ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் போது முன்பள்ளி ஆசிரியர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அவற்றை கவனத்தில் கொண்ட பிரதமர் அங்கு உரையாற்றுகையில்,
முன்பள்ளிக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளை ஒட்டுமொத்த சமூக மற்றும் கல்வி சார்ந்த பிரச்சினைகளிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது. 2024இல் இந்நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாட்டை கடன் சுமையிலிருந்து மீட்டு, சரியான பொருளாதாரக் குறிகாட்டிகளை நிவர்த்தி செய்வதே எமது பிரதான சவாலாக இருந்தது. அதற்கமைய, 2025ஆம் ஆண்டு சவாலான ஆண்டாக அமைந்த போதிலும், நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வரவும், வரவு செலவுத் திட்டத்தைச் சமநிலைப்படுத்தவும் எம்மால் முடிந்தது.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வரும் வேளையிலேயே மத்திய கிழக்கில் போர் ஆரம்பமானது. அதன் தாக்கம் எமது நாட்டிற்கும் ஏற்பட்டுள்ளது. எமது நாட்டுக்கு அதிகளவான வெளிநாட்டு வருமானம் மத்திய கிழக்கில் பணியாற்றும் எமது சகோதர சகோதரிகளிடமிருந்தே கிடைத்து வந்தது. இன்று அவர்களின் உயிருக்கும் வேலைவாய்ப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய கிழக்கு வான்பரப்பு மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவடைந்துள்ளது. அத்தோடு எரிபொருள் போக்குவரத்து தொடர்பான சிக்கல்களும் எழுந்துள்ளன. போர் நீடித்தால் எமக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யச் செலவுகளை ஓரளவுக்குக் குறைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
எமக்குக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருந்தபோதிலும், மேலும் கடன் வாங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க நாம் விரும்பவில்லை.
எமது கல்வி மறுசீரமைப்புக் கொள்கையிலேயே முன்பள்ளிக் கல்வியை மறுசீரமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுவரையான காலப்பகுதியில் முன்பள்ளிகளை ஆரம்பித்தல் மற்றும் ஆரம்ப சிறுவர் பருவ அபிவிருத்தி நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. ஆகையினால், அனைத்து முன்பள்ளிகளையும் ஒழுங்குபடுத்தவும் தரப்படுத்தவும் வேண்டியுள்ளது. இது எளிதான காரியமல்ல.
எனவே, முதலில் அனைத்து முன்பள்ளிகளும் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். ஆசிரியர் பயிற்சிக்காக ஏற்கனவே ஒரு பாடத்திட்டத்தை நாம் தயாரித்துள்ளோம். 2027இல் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான நிர்வாகக் கட்டமைப்பொன்றின் மூலம் முன்பள்ளிகளை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
முன்பள்ளி டிப்ளோமாவுக்காக அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முன்னுரிமை இதன் அடிப்படையிலேயே வழங்கப்படும். முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்முறைத் தகைமைகளை வளர்க்கவும், அவர்களை ஒரு முறையான சம்பளப் படிமுறைக்குள் உள்வாங்கவும் நாம் படிப்படியாக நடவடிக்கை எடுப்போம்.
முன்பள்ளிகள் மாகாண சபைகளுக்கும் பிரதேச சபைகளுக்கும் உட்பட்டவை என்பதால், விடயப்பரப்பிற்குப் பொறுப்பான அமைச்சு பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். எனவே, முன்பள்ளி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கக் கட்டமைப்புக்குழுக்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் ஊடாகத் திட்டமிட்டுச் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன், எனப் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.