மிசிசாகா (பீல் பிராந்தியம்), ஜூன் 2: கனடாவின் மிசிசாகா நகரில் நடந்த கொடூர கத்திக்குத்து கொலை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபரை, பீல் பிராந்திய கொலைப் புலனாய்வுப் பிரிவு துப்பறிவாளர்கள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த மே 19 (செவ்வாய்க்கிழமை) அன்று மதியம் சுமார் 12:15 மணியளவில், ஹுரொண்டாரியோ தெரு (Hurontario Street) மற்றும் ஆக்னஸ் தெரு (Agnes Street) சந்திப்பிற்கு அருகில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அங்குள்ள வாகன நிறுத்துமிடம் (Parking lot) ஒன்றில் ஏற்பட்ட தகராறில், மிசிசாகாவைச் சேர்ந்த சாய் வில்சன் (Chay Wilson – 32) என்ற நபர் கத்தியால் குத்தப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இக்கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், எடோபிகோக் (Etobicoke) பகுதியைச் சேர்ந்த ஜெரோம் எட்வர்ட்ஸ் (Jerome Edwards – 28) என்பவருக்கு எதிராக கனடா தழுவிய (Canada-wide warrant) கைது வாரண்ட்டைப் பிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த மே 29 (வெள்ளிக்கிழமை) அன்று எடோபிகோக்கின் ‘தி குயின்ஸ்வே’ மற்றும் ‘கிப்லிங் அவென்யூ’ பகுதியில் வைத்து ஜெரோம் எட்வர்ட்ஸை காவல்துறையினர் முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டின் (First-Degree Murder) கீழ் கைது செய்தனர். தற்போது அவர் பிணை விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கூடுதல் தகவல் தெரிந்தவர்கள், கொலை மற்றும் காணாமல் போனோர் விசாரணைப் பிரிவை 905-453-2121 (ext. 3205) என்ற எண்ணிலோ அல்லது 1-800-222-TIPS (8477) என்ற ‘பீல் க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ ரகசியத் தகவல் மைய எண்ணிலோ தொடர்புகொண்டு விபரங்களை வழங்கலாம் எனப் பீல் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.