உலகளாவிய அதிகாரப் பகிர்வு மற்றும் வர்த்தகப் பாதைகள் மாறிவரும் தற்போதைய சூழலில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளதாக WION சர்வதேச மாநாட்டில் (WION Global Summit) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடல் என்பது மோதல்களுக்கான வலயாக இல்லாமல், நாகரிகங்களை இணைக்கும் பாலமாகவே இருந்துள்ளது. குறிப்பாக, 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம புத்தரின் போதனைகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தமை, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நாகரிக உறவின் தொடக்கமாகும்.
இன்று உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கும், கொள்கலன் போக்குவரத்தில் பாதியும் இந்தியப் பெருங்கடல் வழியாகவே இடம்பெறுகின்றன. உலகப் பொருளாதாரத்தின் டிஜிட்டல் உயிர்நாடிகளான கடலடித் தொடர்பாடல் கேபிள்கள் (Undersea cables) இந்தப் பிராந்தியத்தின் ஊடாகவே செல்கின்றன. எனவே, இந்த கடல்வழிப் பாதையில் ஏற்படும் பாதிப்பு முழு உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான கடல்சார் வர்த்தகப் பாதையின் மையத்தில் இலங்கை அமைந்துள்ளது. எவ்வாறாயினும், ஒரு நாட்டின் செல்வாக்கு அதன் புவியியல் அமைவிடத்தில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை; அதனை அந்த நாடு எவ்வளவு புத்திசாலித்தனமாக கையாள்கிறது என்பதிலேயே தங்கியுள்ளது. சிறிய நாடுகள் தமது இறையாண்மையைப் பாதுகாக்கும் அதேவேளை, அனைத்து நாடுகளுடனும் சமநிலையான வெளியுறவுக் கொள்கையைப் பேணுவது அவசியமாகும்.
21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான வளர்ச்சியாக இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப எழுச்சி கருதப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் ஒரு ஸ்திரப்படுத்தும் சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இந்த வளர்ச்சி இலங்கைக்குப் பாரிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
பாதுகாப்பான கடல் பாதைகளை உறுதிப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயற்படல்.
போக்குவரத்து, எரிசக்தி மற்றும் நிதி மையமாக இலங்கையை மேம்படுத்தல். குறிப்பாக, தெற்காசிய ‘பசுமை ஹைட்ரஜன்’ தாழ்வாரத்தை உருவாக்குதல்.
கடல்சார் ஆராய்ச்சி, நிலையான மீன்பிடித் தொழில் மற்றும் புதுப்பிக்கத்தக்க கடல் எரிசக்தி துறைகளில் ஒத்துழைத்தல்.
“இந்தியப் பெருங்கடல் ஸ்திரமாக இருந்தால், உலகப் பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கும். இந்த சமுத்திரம் அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட செழிப்பின் வலயமாக இருப்பதை உறுதி செய்வது எமது தலைமுறையின் பொறுப்பாகும்” என அவரது உரையில் வலியுறுத்தப்பட்டது.