கனடாவின் ஒட்டாவா நகரிலுள்ள சென்ட்ரெடவுன் (Centretown) பகுதியில், பொலிஸாருக்கு மாற்றாகச் செயற்படும் சமூகத்தின் தலைமையிலான நெருக்கடி உதவிக் குழு ஆனது, தனது முதலாவது ஆண்டில் 4,400க்கும் அதிகமான மனநலம் மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான நெருக்கடி அழைப்புகளை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளது.
இதில் 92% வீதமான அழைப்புகளுக்குப் பொலிஸாரின் தலையீடு இல்லாமலேயே தீர்வு காணப்பட்டதாக ஒட்டாவா நகரத்தின் புதிய அறிக்கை காட்டுகிறது.
Alternate Neighbourhood Crisis Response (ANCHOR) எனப் பெயரிடப்பட்ட இந்த முன்னோடித் திட்டம், 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பிக்கப்பட்ட ஓராண்டில், இந்த சேவை 4,464 அழைப்புகளுக்குப் பதிலளித்துள்ளது.
மனநலம் சார்ந்த நெருக்கடிகள் அல்லது போதைப்பொருள் பாவனை தொடர்பான வன்முறையற்ற சம்பவங்களின்போது, Centretown பகுதி குடியிருப்பாளர்கள் 911 இற்குப் பதிலாக 211 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் இந்தக் குழுவின் உதவியைப் பெற முடியும்.
2016 ஆம் ஆண்டில் பொலிஸாருடன் ஏற்பட்ட வன்முறைச் சண்டையில் அப்திரஹ்மான் அப்தி (Abdirahaman Abdi) என்பவர் உயிரிழந்ததைத் தொடர்ந்தே, பொலிஸ் அல்லாத இவ்வாறான ஒரு சமூகத் தலையீட்டுக் குழுவின் தேவை உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.