முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று(12) காலை 9 மணியளவில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என்று அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மறைந்த கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்துக்கமைய மகிந்த ராஜபக்சவிற்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த மனோஜ் கமகே,
“கபில சந்திரசேன தாம் வழங்கிய வாக்குமூலமானது அச்சுறுத்தல் மற்றும் பலவந்தத்தின் பேரில் பெறப்பட்டது என ஏற்கனவே நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்துள்ளார்.
இவ்வாறான சட்டவிரோதமான வாக்குமூலத்தின் அடிப்படையில் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தால், அது பாரதூரமான விடயமாகும். எனினும், மகிந்த ராஜபக்ச கேள்விகளைக் கண்டு ஒருபோதும் ஓடி ஒளிபவர் அல்லர்.
அவர் நிச்சயம் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாவார். ஆனால், அச்சுறுத்திப் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அழைப்பு அனுப்பப்பட்டிருந்தால், அதற்கு எதிராக உரிய தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.
கபில சந்திரசேனவின் மரணம் மற்றும் அதனைத் தொடர்ந்த இந்த விசாரணை அழைப்பாணை இலங்கையின் அரசியல் மற்றும் சட்டத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.