ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை (06) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 1,073 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 1,077 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 14 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேக நபர்களிடமிருந்து, 01 கிலோகிராம் 381 கிராம் ஹெரோயின், 667 கிராம் ஐஸ், 500 கிராம் கொக்கெய்ன், 05 கிலோகிராம் 192 கிராம் கஞ்சா, 26,580 கஞ்சா செடிகள், 31 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 118 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 342 போதை மாத்திரைகள், 08 கிலோகிராம் 832 கிராம் மதனமோதகம் மற்றும் 628 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.