பெண் கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புத்தளம் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் விமல் ரோஹணவை புத்தளம் நீதிவான் நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுதலை செய்துள்ளது.
புத்தளம் பதில் நீதிவான் தயானி சந்தியா ரத்நாயக்க சந்தேகநபரான விமல் ரோஹணவுக்கு தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு அனுமதி அளித்தார்.
புத்தளம் பிரதேச சபையின் மங்களஎளிய வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் விமல் ரோஹண கடந்த 5ஆம் திகதி அனர்த்த நிவாரணக் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் கிராம உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை தனது லொறியால் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த விபத்து இடம்பெற் சந்தரப்பத்தில் பிரதேசசபை உறுப்பினர் குறித்த கிராம உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற அனர்த்தக் குழுக் கூட்டத்தின் பின்னரும், விமல் ரோஹண தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு மீண்டும் அச்சுறுத்தல் விடுத்ததாக கிராம உத்தியோகத்தர் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் முந்தலம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று நேற்று காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் தொடர்பான வழக்கு புத்தளம் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் தயானி சந்தியா ரத்நாயக்க தலைமையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்ந்த நீதிவான் சந்தேகநபரை கடும் நிபந்தனைகளுடன் கூடிய பினையில் விடுவித்திருந்தார்.
அதற்கமைய சந்தேகநபரை தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிவான் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை முந்தலம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி கையொப்பமிடுமாறு தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.