இந்த அரசாங்கத்துக்குச் செய்யத் தெரிந்த ஒன்றும் இல்லை இவர்கள் முழுமையாக டயஸ்போரா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே செயற்படுகிறார்கள். நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என பௌத்த தேசியவாத அமைப்பான ‘ராவணா பலய’ அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமங்கள் தோறும் வேலைத்திட்டத்தின் கீழ், அநுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவை தொகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜானக திஸ்ஸகுட்டி ஆராச்சி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஜி. வீரசேன கமகே, சஞ்சீவ எதிரிமான்ன, சுமித் உடுக்கும்புர, ஜயந்த கெட்டகொட மற்றும் ஜகத் குமார உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சத்தாதிஸ்ஸ தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இன்று அரசாங்கத்தில் இருப்பவர்கள் எங்களிடம் வந்து, அடுத்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கேட்கிறார்கள். நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகச் செயற்படும் தரப்பினர், அவரிடமிருந்து விலகுமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.
அவர்களுக்கு நாங்கள் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறோம்; உங்களுக்கு இருப்பது போன்ற முதுகெலும்பில்லாத நிலை எங்களுக்கு இல்லை. நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என்பதை தெளிவாகக் கூறுகிறோம்.
இந்த அரசாங்கத்துக்குச் செய்யத் தெரிந்த ஒன்றும் இல்லை இவர்கள் முழுமையாக டயஸ்போரா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே செயற்படுகிறார்கள்.
இன்று மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை சிறைவைத்து, இந்த நாட்டுக்குச் சேவை செய்த அந்த அன்பான இராணுவ வீரரைத் தண்டித்து, சித்திரவதைக்கு உள்ளாக்கி வருகிறார்கள். நாம் இன்று அனுபவிக்கும் இந்தச் சுதந்திரத்துக்கு, அன்றைய புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய சுரேஷ் சலே போன்றோரின் அர்ப்பணிப்புதான் காரணம்.
அவரைத் துன்புறுத்துவது மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ அல்லது நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயரைச் சிதைப்பதற்காகவே ஆகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்று கூறிக்கொண்டு, இன்று சுரேஷ் சலேவைக் கைது செய்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் அந்தத் தாக்குதலை நடத்திய இப்ராஹிம் என்பவர் அன்றே அந்தத் தாக்குதலில் உயிரிழந்தார்.
ஆனால், உண்மையான சூத்திரதாரிகள் இன்று சுதந்திரமாக இருக்கிறார்கள். தனது உயிரையும் பொருட்படுத்தாது நாட்டுக்காகப் பணியாற்றிய சுரேஷ் சலேவைப் பார்க்க இன்று அவரது மனைவியும் பிள்ளைகளும் சென்றபோது, நான் இந்த நாட்டை நேசித்தேன், இன்றும் நேசிக்கிறேன், எனது இறுதிக்காலத்தில் எனது கண்களைத் தானம் செய்யத் தீர்மானித்திருக்கிறேன் என்று அவர் கூறியதாக அறிந்து நான் கண்கலங்கினேன்.
இவ்வளவு தேசபக்தி கொண்டவரைத் தண்டிப்பது ஏன்? சுரேஷ் சலே வெளியே வந்தால் இவர்களின் முகத்திரை கிழிந்துவிடும் என்பதால் இவர்கள் பயப்படுகிறார்கள்.
அதேபோல், எமது புனித பூமிகளான தலதா மாளிகை, அட்டமஸ்தானம், சொலஸ்மஸ்தானம் ஆகியவற்றை அரசாங்கத்தின் கீழ் கையகப்படுத்த வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இத்தகைய புனித இடங்களை சட்டத்தின் கீழ் கையகப்படுத்த நினைப்பது கூடப் பெரும் தவறாகும். எமது சம்பிரதாயங்களை, எமது மதத்தை, எமது தேசத்தை அழிக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம்.
நாமல் ராஜபக்ஷவைக் கண்டால் இவர்களுக்குப் பயம். அவர் மகிந்த ராஜபக்ஷ என்ற சிங்கத்தின் மூத்த புதல்வர் என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் ஜனாதிபதியானால் மாத்திரமே இந்த நாடு மீண்டும் சரியான பாதையில் செல்லும். 2015க்குப் பிறகு இந்த நாட்டில் முதுகெலும்புள்ள ஒரு தலைவர் இருக்கவில்லை.
இன்று அரசாங்கம் மணல் மூட்டைகளை வைத்து பாலம் அமைப்பதாகக் கூறிக்கொண்டு, தங்களுக்கு வேண்டியபடி பணத்தைச் சுருட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறான முறையற்ற செயல்களை நிறுத்தி, சிங்கள, பௌத்த, கத்தோலிக்க, முஸ்லிம் மற்றும் தமிழ் என அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க, 2029 இல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாமல் ராஜபக்ஷவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவோம் என்றார்.