முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் 13.07.2026 அன்று பாடசாலை நேரம் வகுப்பு ஒன்றுக்குள் புகுந்து சக மாணவரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் புதிதாக உயர்தரம் பயில்வதற்காக சேர்ந்த மாணவர்கள் மூவர் இன்னொரு வகுப்புக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இரும்புக் கம்பியுடன் நுழைந்து அங்கு கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் மீது சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர்.
சம்பவத்தில் இரு மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்
சம்பவத்தை அடுத்து தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தினரும் உறவினர்களும் பாடசாலைச் சூழலில் குழுமி எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
பாடசாலை மாணவர்கள் மூவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் 14.07.2026 இன்று முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
21.07.2026 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார்கள்