புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரித்தல் மற்றும் அதனை மக்கள் மயப்படுத்தல் ஆகிய பணிகளை முன்னெடுப்பதற்கு வரைவு தயாரித்தல் குழு, பிரசாரக் குழு மற்றும் மக்களின் உள்ளீடுகளைப் பெறுவதற்கான குழு ஆகிய 3 குழுக்களை நியமிப்பதற்கு ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழு தீர்மானித்துள்ளது.
தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி மாத நடுப்பகுதியில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்குமென அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கமைய முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனை ஒருங்கிணைப்பாளராகக்கொண்ட 33 பேரடங்கிய வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது.
அக்குழு ஞாயிற்றுக்கிழமை (28) பி.ப 7.00 – 9.00 மணி வரை நிகழ்நிலை முறைமை ஊடாகக் கூடியது.
இக்கூட்டத்தின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவினைத் தயாரிப்பதற்கு வரைவு தயாரித்தல் குழுவையும், இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பிரசாரக் குழுவையும், இதுகுறித்து மக்களிடம் கருத்துக் கேட்டறிந்து, அவர்களது அபிப்பிராயங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களின் உள்ளீடுகளைப் பெறுவதற்கான குழுவையும் நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக வழிநடத்தல் குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி கு.குருபரன் கேசரியிடம் தெரிவித்தார்.
அதேவேளை வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் 33 பேரும் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் இந்த 3 குழுக்களுக்கும் நியமிக்கப்படுவார்கள் என்றும், அச்செயன்முறையை எதிர்வரும் ஒருவார காலத்துக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட அவர், அதன் பின்னர் இந்தக் குழுக்கள் தனித்தனியாகவும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாகவும் அவற்றின் பணிகளை முன்னெடுத்துச்செல்லும் என்றார்.
அதேபோன்று மேற்குறிப்பிட்ட வரைவைத் தயாரிக்கும்போது அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசியப் பேரவையினால் தயாரிக்கப்பட்ட வரைவு, ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவினரிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் கையளிக்கப்பட்ட வரைவு மற்றும் வடக்கு மாகாணசபை இயங்குநிலையில் இருந்தபோது தயாரிக்கப்பட்ட வரைவு ஆகிய மூன்றிலும் உள்ள ஏற்றுக்கொள்ளத்தக்க விடயங்களை உள்வாங்கி, புதிய வரைவைத் தயாரிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் குருபரன் தெரிவித்தார்.
மேலும் அரசியல் தீர்வு குறித்து இவ்வரைவில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படைக்கோட்பாடுகள் குறித்து ஒரு பொது இணக்கப்பாடு எட்டப்படவேண்டியது அவசியம் என்ற விடயமும் இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.