அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கும், தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நிவாரணப் பொதியில் உள்ள முரண்பாடுகள்
“பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய 25,000 ரூபாயும், சேதமடைந்த உபகரணங்களுக்கு 50,000 ரூபாயும், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாயும் வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால், அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி இந்த நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல்கள் இருப்பதாக அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் கொடுப்பனவு, மண்சரிவு மற்றும் சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், சுற்றறிக்கையில் அது குறிப்பிடப்படவில்லை என அதிகாரிகள் கைவிரிப்பதாகத் தெரிகிறது. மக்களை ஏமாற்றாமல் இந்த நிவாரணங்களை உடனடியாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
தோட்டத் தொழிலாளர்களுக்கான சிக்கல்கள்
“தோட்டத் தொழிலாளர்கள் இந்த 25,000 ரூபாய் இழப்பீட்டைப் பெறுவதற்கு தோட்ட அதிகாரியின் சிபாரிசு கடிதம் கட்டாயம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அநேகமான தோட்டத் தொழிலாளர்கள் தற்போது தோட்டங்களுக்கு வெளியே வேலை செய்வதால், இக்கடிதத்தைப் பெறுவதில் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான நிபந்தனைகள் இன்றி, வரி செலுத்தும் பிரஜைகளான அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.”
பாடசாலைகளின் பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்றம்
“மண்சரிவு அபாயம் காரணமாக பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களை வேறு பாடசாலைகளுக்கு மாற்றுவது ஏழைப் பெற்றோர்களுக்கு மேலதிக சுமையை ஏற்படுத்துகிறது. எனவே, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஊடாக முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, பாதுகாப்புச் சுவர்களை அமைப்பதன் மூலம் அந்தப் பாடசாலைகளிலேயே கல்வியைத் தொடர வழிவகை செய்ய வேண்டும். அதேபோல், மண்சரிவு அபாய வலயங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் குடியேறுவது தொடர்பான தெளிவான அறிக்கைகளை அரசாங்கம் விரைந்து வழங்க வேண்டும்.”
சஜித் பிரேமதாசவின் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு
“கடந்த காலங்களில் ஜே.வி.பி (JVP) எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்குத் தள்ளவே முயன்றது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவ்வாறு செயற்படவில்லை. அனர்த்த நிவாரணங்களுக்காக மேலதிக மதிப்பீட்டை கொண்டு வருமாறு அவரே கோரினார். அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச மாநாட்டை நடத்தி நிதியுதவி பெறுமாறு அவர் கூறியபோது அரசாங்கம் அவரைக் கேலி செய்தது. ஆனால், இன்று அதையே செய்ய வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி எப்போதும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகவே செயற்படுகிறது.”
உள்ளூராட்சி சபைகளின் ஜனநாயகம்
“உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர் மற்றும் மேயர்களைத் தெரிவு செய்யும் போது, அரசாங்கம் பகிரங்க வாக்கெடுப்புக்கு அஞ்சுகிறது. இரகசிய வாக்கெடுப்பு மூலம் வரப்பிரசாதங்களை வழங்கி ஜனநாயக விரோத முறையில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
By C.G.Prashanthan