இலங்கை தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதி கட்டமைப்பை, ‘இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள்’ (Targeted Financial Sanctions – TFS) மூலம் பலப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
‘இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள்’ என்பது பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அல்லது அமைப்புகள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாகும். இவர்களின் சொத்துக்களை முடக்குதல், நிதிச் அமைப்புகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அவர்கள் நாட்டிற்குள் எந்தவொரு நிதி நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதைத் தடுத்தல் ஆகியவற்றை இவை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இலங்கையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் தீர்மானம் 1373 (2001) இற்கு இணங்க இந்தத் தடைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வர்த்தமானி (Gazette) அறிவித்தல் மூலம் ஒருவர் அல்லது ஓர் அமைப்பு பெயரிடப்பட்டவுடன், அவர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கும், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை (காணிகள், வாகனங்கள், நகைகள் போன்றவை) பயன்படுத்துவதற்கும் அல்லது விற்பனை செய்வதற்கும் சட்டப்பூர்வமான தடை உடனடியாக அமலுக்கு வரும்.
இந்த நிதித் தடைகளை விதிக்கும் அதிகாரம் வெளிவிவகார அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை நிர்வாக ரீதியாக நடைமுறைப்படுத்தும் ‘தகுதியுள்ள அதிகாரியாக’ (Competent Authority) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக, தகுதியுள்ள அதிகாரியின் அலுவலகம் www.competentauthority.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் சொத்து முடக்கல் உத்தரவுகளை பொதுமக்கள் பார்வையிட முடியும்.
பயங்கரவாத நிதி நடவடிக்கைகள் பெரும்பாலும் மறைமுகப் பணப்பரிமாற்றங்கள் ஊடாகவே இடம்பெறுவதால், இத்தகைய நிதி கண்காணிப்பு நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பையும் நிதித் துறையின் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்த அத்தியாவசியமானவை என அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.