99 வயதை பூர்த்தி செய்து நூறாவது வயதில் தடம் பதிக்கும் மூதாட்டி ஒருவரை கௌரவித்து நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, ‘சேர்க்கிள்’ (CIRCLE) இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று வாழைச்சேனை மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை, பசீர் வீதியில் வசித்து வரும் கலந்தர்லெப்பை சாலிஹா உம்மா என்பவரின் இல்லத்திற்கே அதிகாரிகள் நேரில் சென்று இந்தக் கௌரவிப்பை வழங்கினர்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ‘சேர்க்கிள்’ இளம் பெண்கள் அமைப்பின் நிதி அனுசரணையில் பெண்களை கௌரவிக்கும் திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாழைச்சேனை மத்தி பிரதேச உதவி செயலாளர் அபூசாலி ஜுமானா ஹஸீன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் டபிள்யூ.ரீ. அர்சியா மற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச். சுல்பியா ஆகியோர் மூதாட்டியின் இல்லத்திற்குச் சென்று, அவரது நலன் விசாரித்ததுடன் நினைவு பரிசுகளையும் வழங்கி வைத்தனர்.
நவீன தேசிய அடையாள அட்டையின்படி, மூதாட்டி சாலிஹா உம்மா 1927.02.07 அன்று பிறந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவருக்கு 10 பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.