2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) உள்ளிட்ட வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்பதற்கான தடையற்ற சான்றிதழை (NOC) வழங்க இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை மறுத்ததற்கு எதிராகத் தான் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இலங்கை கிரிக்கெட்கட்டுப்பாட்டுச்சபையிடம் மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்கட்டுப்பாட்டுச் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வாவிற்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், கிரிக்கெட் சபையை நீதிமன்றத்திற்கு இழுப்பதோ அல்லது அமைப்பைச் சங்கடமான நிலைக்குத் தள்ளுவதோ தனது நோக்கமல்ல என்று துஷார குறிப்பிட்டுள்ளார்.
“இந்த விவகாரத்தில் எனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நான் உண்மையாகவே உணர்ந்ததால், நியாயத்தைப் பெற்றுக்கொள்வதே எனது ஒரே நோக்கமாக இருந்தது. எனது கவலைகளுக்கு முறையான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே நான் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்தேனே தவிர, அமைப்புடன் மோதலில் ஈடுபடவோ அல்லது அதற்கு அவப்பெயரை ஏற்படுத்தவோ நான் விரும்பவில்லை” என்று துஷார தனது கடிதத்தில் விளக்கியுள்ளார்.
தன்னுடைய இந்த நடவடிக்கைகளால் இலங்கை கிரிக்கெட்கட்டுப்பாட்டுகசபைம அதன் அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்காக அவர் மனப்பூர்வமான மன்னிப்பையும் கோரியுள்ளார்.
“இந்தச் செயல்பாடுகளால் ஏற்பட்ட தவறான புரிதல்கள் அல்லது சிரமங்களுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்று, சுமுகமான முறையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நான் விரும்புகிறேன். நாம் நேர்மறையான வழியில் முன்னோக்கிச் செல்ல முடியும் என நம்புகிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உடற்தகுதித் தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி, ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்க நுவான் துஷாரவிற்கு NOC வழங்க இலங்கை கிரிக்கெட் சபை மறுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, தனக்கு NOC வழங்குமாறு கிரிக்கெட் சபைக்கு உத்தரவிடக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் துஷார வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, இலங்கை கிரிக்கெட் சபை தனது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.