ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவிலிருந்து நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷார்ஜாவிலிருந்து எயார் அரேபியா விமானம் மூலம் இலங்கை வந்த 32 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய வருகை முனையத்தில் கடமையில் இருந்த சுங்க அதிகாரிகளைக் கண்டதும் அச்சமடைந்த குறித்த நபர், தனது பயணப் பொதிகளை அங்கேயே கைவிட்டுவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளார்.
இதன்போது சுங்க அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சந்தேகநபரின் பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20,200 சிகரெட்டுகள் அடங்கிய 101 சிகரெட் கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகுதி தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.