நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேர்தல் சட்டச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கமும் எதிர்க்கட்சியும் நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது என தேர்தல் ஆணைக்குழுவின் (EC) தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தச் செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்ல ஆணைக்குழு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இந்நிலை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
, இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் முதலில் முன்வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.. தேர்தல் தொடர்பான சட்டங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதியின் செயலாளருக்குப் பலமுறை கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார்.
“ஜனாதிபதியின் செயலாளர் பின்னர் நீதி அமைச்சருக்குக் கடிதம் எழுதி, இந்த விடயத்தை ஆராயுமாறு கேட்டுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக, தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் நீதி அமைச்சரைச் சந்தித்து முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசித்தனர். இருப்பினும், தற்போது அந்தச் செயல்முறை மீண்டும் முடங்கியுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தேர்தல் ஆணைக்குழுவாகிய நாங்கள் இந்தச் சீர்திருத்தங்கள் தானாக வரும் என செயலற்றுக் காத்திருப்பதாகச் சிலர் குற்றம் சாட்டுகின்றனர், ஆனால் அது உண்மையல்ல. எமது அதிகார வரம்பிற்குள் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தச் செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் செய்த பணிகளை எவரும் பார்த்துக் கொள்ள முடியும்.”
தேர்தல் ஆணைக்குழுவிற்கு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து சொந்தமாகச் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தேவையான சட்ட மாற்றங்களை விவாதித்து அங்கீகரிப்பது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என வலியுறுத்தினார். “ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் இந்தச் சட்டச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவதை நான் பார்க்கவில்லை. இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலைமையாகும்.”
அவசர கவனம் செலுத்த வேண்டிய சுமார் 20 முக்கிய சட்டச் சீர்திருத்தங்களைத் தேர்தல் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளதாக ரத்நாயக்க மேலும் கூறினார். பல்வேறு காரணங்களால் வாக்களிக்க முடியாத நிலையில் உள்ள சில வாக்காளர் குழுக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்குத் தீர்வுகாணும் சீர்திருத்தங்களும் இதில் அடங்கும்.
இலங்கையில் தேர்தல் சட்டங்களை நவீனமயமாக்கவும், விளிம்புநிலை மக்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் சட்டச் சீர்திருத்தங்கள் அவசியம் எனத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் பல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். குறிப்பாக வேலைவாய்ப்பு, உடல்நிலை, ஊனம் அல்லது இடம்பெயர்வு காரணமாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும், சமூகத் தடைகளை எதிர்கொள்பவர்களுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பை வழங்குவதன் அவசியம் குறித்து அடிக்கடி வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.
: