மின்சாரசபையின் சேவையாளர்களின் தொழில் காப்புறுதியை உறுதிப்படுத்தாமல் அரசாங்கம் மறுசீரமைப்பினை செயற்படுத்தி மின்சார சபையை சவப்பெட்டிக்குள் தள்ளியுள்ளது. நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள சிக்கல்கள் குறித்து இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். தீர்வின்றேல் நிபந்தனையற்ற வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை மின்சார சபையின் சுதந்திர சேவையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் பிரபாத் பிரியந்த தெரிவித்தார்.
இலங்கை மின்சாரசபை நேற்று திங்கட்கிழமை (9) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறுசீரமைக்கப்பட்டது. இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்தின் முன்பாக ஒன்றுகூடி தொழிற்சங்கத்தினர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சங்கத்தின் பிரதான செயலாளர் பிரபாத் பிரியந்த குறிப்பிடுகையில்,
56 ஆண்டுகால பழமையான இலங்கை மின்சாரசபையை அரசாங்கம் சவப்பெட்டிக்குள் தள்ளியுள்ளது. 25 ஆயிரம் மின்சேவையாளர்களினதும், 72 இலட்சம் மின்பாவனையாளர்களின் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களுடன் முறையான கலந்துரையாடல்களில் ஈடுபடாமல் தான்தோன்றித்தனமான வகையில் மின்சாரசபை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மின்சாரசபையை 06 நிறுவன கட்டமைப்புக்குள் கொண்டு வருவதாகவும், மின்சேவையாளர்களை அந்த நிறுவனங்களில் பணியில் அமர்த்துவதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஊழியர்களின் தொழில் காப்புறுதி தொடர்பில் எவ்வித உடன்படிக்கைகளும், கைச்சாத்திப்படவில்லை.
மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொள்கிறோம். எமது தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.அத்துடன் நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள சிக்கல்களுக்கு உடன் தீர்வு காண வேண்டும்.
இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தி புதிய முகாமைத்துவம் மற்றும் வலுசக்தி அமைச்சுடன் இன்று 10ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். உறுதியான தீர்வு கிடைக்காவிடின் 25 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து நிபந்தனையற்ற வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றார்.