தமிழ் திரை நட்சத்திரங்கள் பங்கு பற்றும் நட்சத்திர துடுப்பாட்ட அணிக்கு ‘வேல்ஸ் சென்னை கிங்ஸ்’ என பெயரிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு நடிகர் ஆர்யா கப்டன் ஆக பணியாற்றுவார் என்றும், இந்த நட்சத்திர துடுப்பாட்ட போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி முதல் இந்தியாவில் தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய ரசிகர்கள் திரைத்துறை மற்றும் துடுப்பாட்ட விளையாட்டை அதிக அளவில் ரசித்து கொண்டாடுவார்கள். அதனை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் எனும் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு தமிழ் திரை நட்சத்திரங்கள் பங்கு பற்றும் சென்னை அணிக்கு ‘வேல்ஸ் சென்னை கிங்ஸ்’ என பெயரிடப்பட்டிருப்பதாக அதன் புதிய உரிமையாளர்களான வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர்- வேல்ஸ் குழுமங்களின் தலைவர் – தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான டொக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் நடிகை – தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீ பிரியா ராஜ்குமார் ஆகியோர் இணைந்து அறிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக அவர்கள் பேசுகையில், ” வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் தலைவராக நடிகர் ஆர்யாவும், வழிகாட்டியாக நடிகர் சரத்குமாரும், விளம்பர தூதராக நடிகை மீனாவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி முதல் தொடங்குகிறது. இதில் சென்னை -கொச்சி- பெங்களூரு- ஹைதராபாத் -மும்பை -என எட்டு அணிகள் பங்கு பற்றுகிறது” என்றனர்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் திரை நட்சத்திரங்களுடன் இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர்களான லட்சுமிபதி பாலாஜி மற்றும் வீரர் முரளி விஜய், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நிறுவனத் தலைவர் விஷ்ணு இந்தூரி உள்ளிட்ட பலர் பங்கு பற்றினர்.