திரைப்படத் துறையில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அவர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு தனியார் அமைப்புகள் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி ஊக்குவிப்பதும், கௌரவிப்பதும் இன்றும் தொடர்கிறது.
இந்நிலையில் தமிழ் திரைப்பட துறையினருக்கும் உலகம் முழுவதும் உள்ள இணையதள பார்வையாளர்களுக்கும் நன்கு அறிமுகமான’ டூரிங் டாக்கீஸ்’ எனும் நிறுவனம் – ‘ ஃப்ரேம் & ஃபேம் திரைப்பட விருதை வழங்க திட்டமிட்டு இருக்கிறது. விருதுகள் தரமான கலைஞர்களை சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்நிறுவனம் மூத்த இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் தலைமையில் நடுவர் குழு ஒன்றினை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
திரைப்பட பத்திரிக்கையாளர்- தயாரிப்பாளர் – இயக்குநர் – நடிகர் – என பன்முக ஆளுமை திறன் கொண்ட திரு. சித்ரா லட்சுமணன் இந்த விருதினை தொடங்கி இருக்கிறார்.
இவர் தன்னுடைய ‘டூரிங் டாக்கீஸ்’ எனும் யூட்யூப் சேனல் மூலமாக தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே . இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக தமிழ் திரைப்படத்துறைக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு விருது வழங்க அவர் திட்டமிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக சித்ரா லட்சுமணன் பேசுகையில், ” திரைப்பட துறையினருக்கு உத்வேகம் அளிப்பதற்கு ஏதேனும் செய்திட வேண்டும் என திட்டமிட்டேன். இதற்காகத்தான் ‘ ஃப்ரேம் & ஃபேம் திரைப்பட விருது’ எனும் பெயரில் விருது வழங்கப்படுகிறது. கலைஞர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் .. மேடையில் தோன்றி விருது பெறும்போது கிடைக்கும் கரவொலியை விரும்பாதவர்களே கிடையாது.
இதற்காக பொருத்தமான கலைஞர்களை தெரிவு செய்வதற்காக குழு ஒன்றினை அமைத்திருக்கிறோம். அந்த குழுவிற்கு இயக்குநர் கே. பாக்யராஜ் தலைவராக செயல்படுவார். இந்தக் குழுவில் திருமதி. குஷ்பூ சுந்தர் – திரு. இளவரசு – திரு. முரளி ராமசாமி- திரு. டி. சிவா – திரு ஆர். கே. செல்வமணி- திரு. ஆர். வி. உதயகுமார் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்” என தெரிவித்தார்.
இந்த ஃப்ரேம் & ஃபேம் திரைப்பட விருது சிறந்த பத்திரிக்கை தொடர்பாளர் – சிறந்த இயக்குநர் – சிறந்த கதாநாயகி- என ஐம்பதிற்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருது வழங்கப்பட உள்ளது. அத்துடன் சில பிரத்யேக பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதியன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்குவது என்பது தரம் குறைந்ததாகவும் மடினப்படுத்தப்பட்டு விட்டதாகவும், வணிகத்தனம் மிக்கதாகவும் கருதப்படும் இன்றைய சூழலில் முறையாக விருதுக்குரிய கலைஞர்களை தெரிவு செய்வதற்காக திரைத்துறையில் அனுபவம் மிக்க கலைஞர்களின் தலைமையில் குழு அமைத்து, விருதுக்குரிய கலைஞர்களை தெரிவு செய்யவிருப்பதால் இந்த ஃப்ரேம் & ஃபேம் திரைப்பட விருது நிச்சயமாக கலைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரைப்பட துறையினரும் எதிர்பார்க்கும் தரமான விருதாகவே திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.