தமிழ் கனடிய சமூகம் தமிழ் இனப்படுகொலையை நினைவுகூருவதற்கான சக்திவாய்ந்த அடையாளமாகவும் முக்கிய இடமாகவும் திகழும் தமிழ் இனப்படுகொலை நினைவிடத்தைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் உறுதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும். என கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அறிக்கையொன்றில் கனடியத் தமிழர் தேசிய அவை மேலும் தெரிவித்துள்ளதாவது
கடந்த மார்ச் 20, 2026 அன்று பிராம்ப்டனில் (Brampton) உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்குச் சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பீல் பிராந்திய பொலிஸாரின் (Peel Regional Police) வெறுப்புணர்வுக் குற்றப்பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, பிராம்ப்டனைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, அவன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை ஏப்ரல் 2, 2026 அன்று பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
பிராம்ப்டன் சிங்குவாசி பூங்காவில் (Chinguacousy Park) அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடத்தை இலக்கு வைத்து மீண்டும் மீண்டும் அரங்கேற்றப்படும் இத்தகைய வெறுப்புணர்ச்சியால் தூண்டப்பட்ட காடைத்தனமான செயல்கள், வெறும் குறும்புத்தனமான செயல்கள் அல்ல என்பதை NCCT ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது. இவை தமிழ் இனப்படுகொலையை மறுப்பதையும் சிதைப்பதையும் அடிப்படையாகக் கொண்ட வெறுப்புணர்ச்சி செயல்கள் என்பதைத் தெளிவாக அங்கீகரிப்பதும் உறுதிப்படுத்துவதும் முக்கியமானது. இந்தச் செயல்களின் வெறுக்கத்தக்கத் தன்மை, தமிழ் கனடிய சமூகத்தை அச்சுறுத்துவதற்கும், பயமின்றித் தமிழ் இனப்படுகொலையை நினைவுகூருவதற்கும் அஞ்சலி செலுத்துவதற்குமான அவர்களின் உரிமையை ஒடுக்குவதற்குமான தெளிவான மற்றும் கவலைக்குரிய உள்நோக்கத்தைக் காட்டுகிறது.
இந்தச் சம்பவங்களை ஒரு வெறுப்புணர்வுக் குற்றக் கட்டமைப்பிற்குள் வகைப்படுத்தி விசாரணை செய்வது, குற்றவாளியைப் பொறுப்பாக்குவதற்கும், நீதியைப் பெறுவதற்கும் மற்றும் இத்தகைய வெறுப்புணர்ச்சி செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் எடுக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் அவசியமான நடவடிக்கையாகும்.
பீல் பிராந்திய பொலிஸார், குறிப்பாக அதன் வெறுப்புணர்வுக் குற்றப்பிரிவு, மேற்கொண்ட முழுமையான விசாரணைக்கும், இந்தச் செயல்களின் தீவிரமான மற்றும் வெறுப்புணர்ச்சியால் தூண்டப்பட்ட தன்மையை அங்கீகரித்தமைக்கும் NCCT தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், தமிழ் கனடிய சமூகம் தமிழ் இனப்படுகொலையை நினைவுகூருவதற்கான சக்திவாய்ந்த அடையாளமாகவும் முக்கிய இடமாகவும் திகழும் தமிழ் இனப்படுகொலை நினைவிடத்தைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் உறுதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று NCCT அழைப்பு விடுக்கிறது.