மிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி320க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள், வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் இயக்கங்களால் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
இது குறித்து மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளதாவது
15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள எஞ்சிய 10 தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை எடுக்குமாறு அதில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர், மற்றுமொரு இருவர் தமது வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை 17 ஆண்டுகளாக சிறையில் காத்திருக்கின்றனர். இதன் பொருள் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னரே அவர்கள் 17 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளனர் என்பதாகும்!
நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகவும், தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடியும் அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இக்கோரிக்கையானது முன்னுதாரணம் இல்லாதது ஒன்றல்ல; முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவும் 1977 ஆம் ஆண்டில் குற்றவியல் நீதிக்கான ஆணைக்குழு (CJC) சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த அனைத்து ஜே.வி.பி (JVP) உறுப்பினர்களுக்கும் இது போன்றதொரு விடுதலையை வழங்கியிருந்தார்.