தனியார் வங்கியொன்றின் பொது பேரேட்டுக் கணக்கிலிருந்து (General Ledger) 13 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தரவுகளை உள்ளீடு செய்த அதிகாரிகள் உள்ளிட்ட ஐவரிடம் வாக்குமூலம் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம வியாழக்கிழமை (30) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த மோசடி தொடர்பாக விளக்கமறியலில் உள்ள லஹிரு ஹர்ஷண, பதும் சங்கல்ப, சாரங்க சேனாதீர உள்ளிட்ட நால்வர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கையில், முதலாவது சந்தேகநபர் 2022 இல் வங்கியின் கடன் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாட்டைப் பயன்படுத்தி இந்த மோசடியை ஆரம்பித்துள்ளார். மோசடி செய்த பணத்தை ‘பைனான்ஸ்’ கணக்குகள் ஊடாக கிரிப்டோகரன்சியாக மாற்றி, மீண்டும் உள்நாட்டுப் பணமாகப் பெறத் திட்டமிட்டுள்ளார்.
சந்தேகநபர் தனது சகோதரரான இரண்டாவது சந்தேகநபருடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். மற்றுமொரு நபரின் பெயரில் உள்ள பைனான்ஸ் கணக்கொன்றில் மாத்திரம் 10 பில்லியன் ரூபா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் 14 பேர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் 4 அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, இச்சம்பவத்தில் 2,619 தடவைகள் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் 10 மில்லியன் முதல் 50 மில்லியன் ரூபா வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள், 2024 முதல் இவ்வளவு பெரிய மோசடி நடக்கும் வரை வங்கியின் கணக்காய்வுப் பிரிவு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினர். மோசடி குறித்து வங்கியின் கணக்காய்வு அறிக்கைகளில் ஏதேனும் தகவல்கள் வெளிப்பட்டிருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இரு தரப்பு விடயங்களையும் பரிசீலித்த நீதிவான், தரவுகளை உள்ளீடு செய்த ஐந்து அதிகாரிகளிடம் உடனடியாக வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அத்துடன், 2024 ஆம் ஆண்டிலிருந்து வங்கியின் அனைத்து கணக்காய்வு அறிக்கைகளையும் பரிசோதித்து, உயர்மட்ட அதிகாரிகளுக்கு இது தெரிந்திருந்ததா ? என விசாரணை செய்யுமாறும், ஒவ்வொரு மாதமும் பணம் எவ்வாறு வங்கியிலிருந்து வெளியேறியது என்பது குறித்த முழுமையான அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையில் சமர்ப்பிக்குமாறும் வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.