தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எம்.பி. கைதர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேணிநகர் பகுதியில், பொதுத் தேவைக்காக காணி ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த காணியை தனிநபர் ஒருவர் அத்துமீறி தன்வசப்படுத்தியிருந்தார். இது குறித்துப் பிரதேச சபை உறுப்பினர், கிராம அபிவிருத்திச் சங்கம், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த விவகாரம் தொடர்பாக பிரதேச செயலாளர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுத்து, உண்மைகளைத் தெளிவுபடுத்தியதன் மூலம் அக்காணி தற்போது அரச வசமாக்கப்பட்டுள்ளது. இக்காணியை மீட்கத் துரித நடவடிக்கை எடுத்த பிரதேச செயலாளருக்கு, கிராம மக்கள் சார்பாக தனது மனப்பூர்வமான நன்றிகளை\ தெரிவிப்பதாக பிரதேச சபை உறுப்பினர் கைதர் குறிப்பிட்டார்.
அரச செலவில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ள இக்காணியில், எதிர்காலத்தில் மத்திய மருந்தகம் (Central Dispensary) ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.