செம்மணி உள்ளிட்ட சகல மனிதப்புதைகுழிகளிலும் சர்வதேச தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும், வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேசக் கண்காணிப்புடனான சுயாதீன விசாரணைகள் இடம்பெறுவதை உறுதிசெய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெள்ளிக்கிழமை (19) செம்மணி மனிதப்புதைகுழியை நேரடியாகச் சென்று பார்வையிட்ட நிலையில், செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச நீதியையும் கண்காணிப்பையும் கோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்துக்கு அருகாமையில் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதுமாத்திரமன்றி மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு கடிதமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களான நாம், பின்வரும் விடயங்களை உங்களது உடனடிக் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
இலங்கையில் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் கடந்திருக்கும் போதிலும், எந்தவொரு பொறிமுறையின் ஊடாக எமக்கான உண்மையும், நீதியையும் நிலைநாட்டப்படவில்லை. நீதிக்காகப் போராடி 400 க்கும் மேற்பட்ட தாய், தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறியாமலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நாமும் உயிரிழப்பதற்குள் வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்கும், அவர்கள் எங்கே என்ற உண்மையை வெளிப்படுத்துவதற்கும் சுயாதீனமானதும், நம்பகமானதுமான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துமாறும், அதனை முன்னிறுத்தி சர்வதேச சமூகம் அவசியமான தலையீட்டை மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் அண்மையில் நீதியமைச்சரால் வெளியிடப்பட்ட கருத்துக்களை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். மாறாக நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். உண்மை கண்டறியப்படவேண்டும். நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதிலிருந்து கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உண்மை மற்றும் நீதிக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றன. இருப்பினும் அரசாங்கமானது இழப்பீடு வழங்கல், மரணச்சான்றிதழ் வழங்கல் மற்றும் ஏனைய நிர்வாக நடவடிக்கைகள் மூலம் வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரத்தை மூடிமறைக்க முற்படுவதுபோல் தெரிகிறது. இழப்பீடு ஒருபோதும் நீதிக்கு ஈடாகாது. உண்மை வெளிப்படுத்தப்படாமல் வழங்கப்படும் எந்தவொரு இழப்பீடும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குரிய நீதிப் பாதுகாப்புக்கான உரிமையை மறுப்பதாகவே அமையும்.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் என்பவற்றுக்கு ஒதுக்கப்படும் வளங்கள், உண்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்குப் பதிலாக, வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரத்தை மூடிமறைப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது குறித்து மிகுந்த கவலையடைகிறோம்.
அதேபோன்று இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சமத்துவமான முறையில் பேணப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். குறிப்பாக அநுராதபுரத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டிருப்பது தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது. மறுபுறம் தமது பாரம்பரிய நிலங்களைப் பாதுகாக்க முயன்ற தமிழ் மதத்தலைவர்கள் பாதுகாப்புப்படையினரால் அவமதிக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அதேவேளை பயங்கரவாதத்டைச்சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், தற்போது அதற்குப் பதிலாகப் புதிய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு முற்படுவது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.
மேலும் செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 380 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான முக்கிய ஆதாரங்களாகும். இவ்வாறானதொரு பின்னணியில் உள்நாட்டு விசாரணைகள் மீது எமக்கு எவ்வித நம்பிக்கையுமில்லை. மாறாக சர்வதேசக் கண்காணிப்புடன்கூடிய நம்பகமான தடயவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.