இந்தியாவின் பண்டைய காலக் கடல்சார் வணிகப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில், ஆணிகள் இன்றி முற்றிலும் கைகளால் தைக்கப்பட்ட ‘ஐஎன்எஸ்வி கவுண்டின்யா’ (INSV Kaundinya) என்ற மரக்கப்பல், 17 நாட்கள் பயணத்திற்குப் பிறகு ஓமன் நாட்டின் மஸ்கட் துறைமுகத்தைச் சென்றடைந்தது.
இந்த கப்பல் கட்டுவதற்கு ஆணிகளோ அல்லது உலோகப் பிணைப்புகளோ பயன்படுத்தப்படவில்லை. தேங்காய் நாரால் செய்யப்பட்ட கயிறுகளைக் கொண்டு மரப்பலகைகள் ஒன்றாகத் தைக்கப்பட்டு, இயற்கையான பிசின்கள் மூலம் ஒட்டப்பட்டுள்ளன.
5-ஆம் நூற்றாண்டில் அஜந்தா குகை ஓவியத்தில் காணப்பட்ட ஒரு கப்பலின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் எஞ்சின் கிடையாது.
இது முற்றிலும் காற்றின் திசைக்கேற்ப பாய்மரங்களின் (Square Sails) உதவியால் மட்டுமே இயங்குகிறது.
கடந்த டிசம்பர் 29 ஆம் திகதியன்று குஜராத்தின் போர்பந்தரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய இக்கப்பல், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஏனைய நாடுகளுடன் கடல் வணிகம் செய்த அதே பாதையை மீண்டும் கடந்து காட்டியுள்ளது.
கப்பலின் பாய்மரங்களில் விஷ்ணுவின் உருவமான ‘கண்டபேருண்டா’ (இருதலைப் பறவை) சின்னமும், முகப்புப் பகுதியில் தென்னிந்திய மரபான ‘சிம்ம யாழி’ சிலையும் செதுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஹரப்பா காலத்து பாணியிலான கல் நங்கூரம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. : இப்பயணத்தில் பங்கேற்ற குழுவினர் கூறுகையில், “கப்பலில் குளிரூட்டி வசதியோ, முறையான படுக்கைகளோ கிடையாது.
கடல் சீற்றம் மற்றும் கடும் மழையையும் கடந்து இப்பயணத்தை வெற்றிகரமாக முடித்தது ஒரு சாகச அனுபவம்” எனத் தெரிவித்தனர்.
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் இக்குழுவில் ஒருவராகப் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.