சிசிடிவி கமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆந் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவினை அக்கரைப்பற்று நீதிமன்று வழங்கியுள்ளது.
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குத் தனியார் பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட 34 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 20 வயதுடைய சந்தேக நபர் வியாழக்கிழமை (26) அதிகாலை அக்கரைப்பற்றில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (26) ஆஜர்படுத்திய போது எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர் சிசிரிவி கமரா பொதிக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த நிலையில் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைதானார்.
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் இனந்தெரியாத நபரொருவரால் பொதியொன்று கையளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொதியில் தொலைபேசி இலக்கமொன்று குறிப்பிடப்பட்டிருந்ததுடன்இ அக்கரைப்பற்றில் உள்ள நபரொருவர் இதனைப் பெற்றுக்கொள்வார் எனப் பேருந்து நடத்துனரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடத்தல் குறித்துக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் பகீரதன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த இடத்திற்கு பொதியை பெற்றுக்கொள்ள வருகை தந்த சந்தேக நபர் கைதானார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்ட சிசிரிவி கமராவினை சோதனையிட்டபோது அதன் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 34 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். போதனா மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த நபரின் இரு சிறுநீரகங்களும் தானம்
இருவருக்கு வாழ்வளித்த சிங்களவர்
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த சிங்களவர் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்ட நிலையில், அவர் மூலம் இருவருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-
போகஸ்வெள பகுதியைச் சேர்ந்த ஆர். முத்துபண்டா என்பவர் மூளைக்கட்டி காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை மூளைச் சாவடைந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அவரது இரு சிறுநீரகங்களையும் தானமாக வழங்க ஒப்புக்கொண்டனர்.
இதற்கமைய, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் இரு சிறுநீரகங்களும் பிரித்தெடுக்கப்பட்டு, காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஒருவருக்கு ஒரு சிறுநீரகம் உடனடியாக வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் நாட்டிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிறுநீரகம் அவசியம் தேவைப்படும் நபருக்குப் பொருத்தப்பட்டுள்ளது.