கனடாவில் குழந்தைகள் ஆபாசப் படங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்த நிலையில், நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் எட்மண்டன் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்பெர்ட்டா சட்ட அமலாக்கப் பதில் குழுவின் (ALERT) தகவல்படி, ‘செயின்ட் ஆஸ்கார் ரொமேரோ கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில்’ (St. Oscar Romero Catholic High School) முன்பு ஆசிரியராகப் பணியாற்றிய ஜிம்மி புவெனா (Jimmy Buena), கடந்த 2026 ஏப்ரல் 15 அன்று எட்மண்டன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
ஜிம்மி புவெனா, முகநூல் (Facebook) தளம் ஊடாகக் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைப் பொருட்களைப் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, 2025 ஜூன் மாதத்தில் காவல்துறை அவருக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது. அவர் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் முன்னர் கருதியிருந்தனர்.
புவெனா பின்வரும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்:
-
குழந்தைகள் ஆபாசப் படங்களை உருவாக்குதல்
-
குழந்தைகள் ஆபாசப் படங்களைப் பார்வையிடுதல்
-
குழந்தைகள் ஆபாசப் படங்களை வைத்திருத்தல்
-
குழந்தைகள் ஆபாசப் படங்களைப் பரப்புதல்/அனுப்புதல்
கைது செய்யப்பட்ட புவெனா பின்னர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும், நாட்டை விட்டு வெளியேறியமைக்காக அவர் மீது தற்போது மேலதிகக் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை என்றும் ALERT தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து செயின்ட் ஆஸ்கார் ரொமேரோ கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எட்மண்டன் கத்தோலிக்க பள்ளிப் பிரிவு (ECSD) கூறியுள்ளது. அத்துடன், இந்த விவகாரத்தில் மாணவர்கள் எவருக்கும் தொடர்பிருப்பதாக எந்தவொரு தகவலும் இல்லை எனப் புலனாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புவெனா 2026 ஜூன் 18 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகவிருந்தார்.