கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், தண்டர் பே (Thunder Bay) நகரில் கனடா தினத்தன்று (ஜூலை 1) இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 41 வயதுடைய நபர் ஒருவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல் இன வெறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், நகரின் வெறுப்புக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (hate crime unit) இந்த விசாரணையை ஒப்படைத்துள்ளனர்.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி மதியம் 12:45 மணியளவில் தண்டர் பே நகரின் வில்லா வீதி (Villa Street) மற்றும் கம்பர்லாண்ட் வீதி வடக்கு (Cumberland Street North) ஆகிய பகுதிகள் இணைந்திடும் இடத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்கும் மேலான நிலையில் தற்போது காவல்துறை இக்குற்றச்சாட்டுகளை அறிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது மூன்று தாக்குதல் குற்றச்சாட்டுகள், உடற்காயத்தை ஏற்படுத்தியதற்கான ஒரு தாக்குதல் குற்றச்சாட்டு, கொலை மிரட்டல் அல்லது கடுமையான காயம் ஏற்படுத்துவதாக அச்சுறுத்தியமை மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றக் காவலில் (remanded) வைக்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீன முஸ்லிம் குடும்பமே இலக்கு:
மத்திய கிழக்கில் நீதி மற்றும் அமைதிக்கான கனேடியர்கள் அறக்கட்டளையின் (CMEF) கீழ் இயங்கும் ‘இனவெறி எதிர்ப்புத் திட்டம்’ (ARPCF) என்ற அமைப்பு, பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பாலஸ்தீன முஸ்லிம் குடும்பத்தினர் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.
அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி: பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி, இரு இளம் குழந்தைகள் மற்றும் அவரது 63 வயதுடைய தாயாருடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போதே இந்தத் கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் வன்முறையாக மாறுவதற்கு முன்பாக, அக்குடும்பத்தினரை நோக்கி “f*** Muslims” என்பது உள்ளிட்ட கடுமையான இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் ஆபாசக் கெட்ட வார்த்தைகளைப் பேசி வசைபாடியுள்ளனர்.
“இந்தத் தாக்குதலானது இஸ்லாமிய வெறுப்பு (Islamophobia) மற்றும் பாலஸ்தீன எதிர்ப்பு இனவாதம் ஆகிய இரண்டின் வெளிப்பாடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்” என அந்த அமைப்பு ஜூலை 17 அன்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. அக்குடும்பத்தில் இருந்த இரு பெண்கள் இஸ்லாமிய அடையாள ஆடையுடன் இருந்ததால் அவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய வன்முறைகள் தனித்து உருவாவதில்லை; பாலஸ்தீனியர்களை மனிதநேயமற்றவர்களாகச் சித்தரிப்பதும், முஸ்லிம் சமூகங்கள் மீது சந்தேகப் பார்வையை இயல்பாக்குவதும் தான் கனேடிய மண்ணில் இத்தகைய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என அந்த அமைப்பின் முதன்மை ஆய்வாளர் ஜமிலா எவைஸ் (Jamila Ewais) சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறை மற்றும் சிவில் அமைப்புகளின் கருத்து:
இத்தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவருக்கு அவசர மருத்துவக் குழுவினர் (EMS) முதலுதவி வழங்கியதுடன், உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் அவர் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஜூலை 16 அன்று வெளியான போலீஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்குத் தங்களது கையடக்கத் தொலைபேசி பதிவுகள் மற்றும் பாதுகாப்பு கேமரா (CCTV) காட்சிகளை வழங்கி உதவிய பொதுமக்களுக்குத் தண்டர் பே காவல்துறை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், “எங்கள் சமூகத்தில் ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பாக வாழும் உரிமையுள்ளது. வெறுப்பு அல்லது பாகுபாட்டின் அடிப்படையில் எவரேனும் இலக்கு வைக்கப்பட்டால், அதுகுறித்து தீவிர விசாரணை நடத்த தண்டர் பே காவல்துறை கடமைப்பட்டுள்ளது” என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இதேவேளை, வெறுப்புக் குற்றப் பிரிவின் தலையீட்டை வரவேற்றுள்ள ARPCF அமைப்பு, இச்சம்பவம் குறித்து ஒரு முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளதுடன், கனேடியப் பொது அதிகாரிகள் அனைவரும் இந்த இனவெறித் தாக்குதலை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலுவான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.