12,600 வேலைவாய்ப்புகளை கனடாவில் உருவாக்கும் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, கனடா ஆயுதப் படைகள் 72 Gripen போர் விமானங்களையும், 6 GlobalEye கண்காணிப்பு விமானங்களையும் வாங்க வேண்டியிருக்கும் என்று ஸ்வீடன் நிறுவனமான சாப்(Saab) கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசு மற்றும் தொழில்துறை வட்டாரங்கள் கூறுவதாவது, இரு வகை விமானங்களுக்கான சாப்(Saab) நிறுவனத்தின் முன்மொழிவுகள் தற்போது ஒட்டாவாவில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பலன்கள் தொடர்பான நிபுணர்களால் ஆய்வு செய்யப்படுகின்றன.
சாப்(Saab) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கடந்த ஆண்டு இறுதியில், கனடாவில் சுமார் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் அந்த எண்ணிக்கையை அடைவதற்குத் தேவையான விமான வாங்கல் அளவு குறித்து அப்போது வெளிப்படுத்தப்படவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த சுங்கக் கட்டணங்களால் பாதிக்கப்பட்ட தொழில்துறையை வலுப்படுத்தவும், இராணுவ உபகரணங்களின் ஆதாரங்களை பல்வகைப்படுத்தவும் முயற்சிக்கும் கார்னி அரசின் உள்ளகத்தில் சாப்(Saab)நிறுவனத்தின் திட்டங்கள் குறிப்பிடத்தக்க ஆர்வத்தைப் பெறுகின்றன.
“கனடாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய முக்கிய திட்டங்களில் அரசு ஆர்வம் காட்டுகிறது,” என்று தொழில் அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்தார்.
“கனடா அரசுக்கு, கனடிய ஆயுதப் படைகளுக்கான நவீன, இறையாண்மை சார்ந்த தீர்வுகளை வழங்கவும், உள்நாட்டு தொழில்துறையை வளர்க்கவும் Saab தயாராக உள்ளது,” என்று சாப் கனடா (Saab Canada) நிறுவனத் தலைவர் சைமன் கேரோல் தெரிவித்தார்.
தற்போது, இந்த ஆண்டிலிருந்து 16 F-35 விமானங்களை பெறுவதற்கான தயாரிப்புகளை கனடா மேற்கொண்டு வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு புதிய போர் விமானக் குழாம்களை ஒருங்கிணைக்கும் கனடாவின் திறன் குறித்து பல இராணுவ நிபுணர்கள் சந்தேகங்களை எழுப்புகின்றனர். மேலும், Saab நிறுவனத்தின் வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் மேலதிக ஆய்வு மற்றும் விளக்கங்களை தேவைப்படுத்தும் என்றும் பாதுகாப்புத் தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
F-35 தயாரிப்பு நிறுவனமான Lockheed Martin, கனடாவில் குறிப்பிடத்தக்க பொருளாதார பலன்களை வழங்க முடியும் என்று கூறியுள்ளது. கனடா தனது முழு ஆர்டரைத் தொடர்ந்தால் $15 பில்லியன் மதிப்பிலான பணிகளை வழங்குவோம் என்றும் அது வாக்குறுதி அளித்துள்ளது. கனடா அரசு மற்றும் Lockheed Martin இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துவருவதாக அமைச்சர் ஜோலி தெரிவித்தார்.