கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் சாமான்கள் பெறும் பகுதிக்கு (Luggage Belt) அருகில் கைவிடப்பட்டிருந்த, 1 கோடியே 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை, 07/17 அன்று பகல் விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சிகரெட் தொகுதி நேற்று காலை 08:45 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 இலக்க விமானம் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இவை 4 பயணப் பொதிகளில் (Travelling Bags) பொதி செய்யப்பட்டிருந்தன. அந்தப் பயணப் பொதிகளுக்குள், வெளிநாட்டு தயாரிப்பான “மென்செஸ்டர்” (Manchester) ரகத்தைச் சேர்ந்த 75,200 சிகரெட்டுகள் அடங்கிய 376 சிகரெட் கார்ட்டன்கள் இருந்தன. இது தொடர்பில் கடுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முறையான சுங்க விசாரணைகளை மேற்கொண்டு, இந்த சிகரெட் தொகையை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.