கடந்த செப்டம்பர் மாதம் வரையில் இலங்கையின் மொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தொகை 30.9 டிரில்லியன் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் 27(2) பிரிவின் கீழ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த மொத்தக் கடனில் உள்நாட்டு கடன் 19.6 டிரில்லியன் ரூபாவும் வெளிநாட்டு கடன் 11.3 டிரில்லிய் ரூபாவும் உள்ளடங்கியுள்ளன.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரை, பெற்றுக்கொள்ளப்பட்ட புதிய உள்நாட்டு கடன் 1,393 பில்லியன் ரூபாவும், வெளிநாட்டு கடன் 526 பில்லியன் ரூபாவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் அரசு செலுத்திய கடனின் மொத்தம் 521 பில்லியன் ரூபா எனவும், அதில் மூலதனத் தவணை 310 பில்லியன் ரூபா, வட்டி 211 பில்லியன் ரூபாவும் அடங்கியதாகவும் அமைச்சர் விளக்கினார்.
மேலும், உள்நாட்டு கடனுக்கான தவணை 5,391 பில்லியன் ரூபாவும், வட்டி 1,340 பில்லியன் ரூபாவும் என மொத்தம் 6,731 பில்லியன் ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை குறைந்தபட்சம் 4.5% அளவில் நிலைநிறுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது எனவும் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.