ஒன்டாரியோவின் ஓவன் சவுண்ட் நகரில் உள்ள உணவக உரிமையாளரான ஷெரீப் ரஹ்மான் கொல்லப்பட்ட வழக்கில், தங்களின் பங்களிப்பை ராபர்ட் எவன்ஸ் ஜூனியர் (Robert Evans Jr.), அவரது தந்தை ராபர்ட் எவன்ஸ் சீனியர் (Robert Sr.) மற்றும் மாமா பாரி எவன்ஸ் (Barry Evans) ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், சாப்பிட்ட உணவிற்கான கட்டணத்தைச் செலுத்தாமல் தப்பியோட முயன்ற எவன்ஸ் குழுவினரைத் தடுக்க முயன்றபோது ஷெரீப் ரஹ்மான் கொல்லப்பட்டார்.
மைக்கேல் ஜோன்ஸ் (Michael Jones) என்றும் அழைக்கப்படும் எவன்ஸ் ஜூனியருக்கு இச்சம்பவம் நடந்தபோது 23 வயது. கட்டணம் செலுத்தாமல் ஓட முயன்ற எவன்ஸ் மற்றும் அவரது குழுவினரை ரஹ்மான் தனது ‘தி கறி ஹவுஸ்’ (The Curry House) உணவகத்திற்கு வெளியே தடுத்துக் கேட்டபோது, அவரைத் தான் முகத்தில் குத்தியதாக எவன்ஸ் ஜூனியர் ஒப்புக்கொண்டார்.
அந்த ஒற்றைக் குத்தில் ரஹ்மான் தரையில் விழுந்தபோது, அவரது தலை நடைபாதையில் பலமாக மோதியது. மண்டை ஓடு உடைந்ததாலும், மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவாலும் அவர் சில நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார். ரஹ்மானுக்கு மனைவியும் ஒரு இளம் மகளும் உள்ளனர்.
அரசுத் தரப்பால் வாசிக்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை அறிக்கையின்படி, எவன்ஸ் ஜூனியர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோட அவரது மாமா பாரி எவன்ஸ் உதவியுள்ளார். தந்தை ராபர்ட் எவன்ஸ் சீனியர் (ஜஸ்டின் ஜோன்ஸ் என்ற பெயரிலும் அறியப்படுபவர்), சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே தனது மகன் இங்கிலாந்திற்கு (UK) தப்பிச் செல்வதற்காக விமானப் பயணச் சீட்டை (Plane ticket) வாங்கியுள்ளார்.
தனது மருமகன் தப்பிக்க உதவிய பின்னர், பாரி எவன்ஸ் தாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு (Motel) சென்று, அந்தப் பகுதியில் தாங்கள் அறை வாடகைக்கு எடுத்ததற்கான அனைத்து பதிவுகளையும் அழித்ததாக ஒப்புக்கொண்டார்.
அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்பு இணைந்து சமர்ப்பித்த இந்த மனு ஒப்பந்தத்தின் (Plea deal) மூலம், ராபர்ட் சீனியர் மற்றும் பாரி எவன்ஸ் ஆகிய இருவருக்கும் அவர்கள் ஏற்கனவே சிறையில் கழித்த காலமே (Time served) தண்டனையாகக் கருதப்பட்டு, அவர்கள் இங்கிலாந்துக்குத் திரும்புவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தற்போது குடியேற்றக் காவலில் (Immigration hold) உள்ளதால், இன்னும் சில நாட்களில் இங்கிலாந்திற்கு நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளது.
ராபர்ட் எவன்ஸ் ஜூனியரின் இறுதித் தீர்ப்பு வரும் ஜூலை மாதம் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு 42 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஏற்கனவே நீதிமன்றக் காவலில் இருந்த காலம் கழிக்கப்பட்டால், இன்னும் சுமார் 8 மாதங்கள் மட்டுமே சிறையில் இருக்க வேண்டியிருக்கும், அதன் பிறகு அவர் நாடு கடத்தப்படுவார்