லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி குறித்த விமர்சனங்களைத் தொடர்ந்து, குமார ஜயகொடி தனது எரிசக்தி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, தற்போதைய அமைச்சரவையில் உள்ள ஒருவரை அந்தப் பதவிக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தேர்வு செய்தால், அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வழிவகை செய்யும் வகையில், தான் பதவியை இராஜினாமா செய்வதாக திரு. ஜயகொடி எழுத்துப்பூர்வமாக அறிவித்திருந்தார். அவருடன் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலவும் பதவி விலகினார். 2009ஆம் ஆண்டு முதல் நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஏற்கனவே ஒரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சுப் பொறுப்பு இன்னும் எந்த அமைச்சருக்கும் வழங்கப்படவில்லை. புதிய அமைச்சரை நியமிப்பது குறித்து அரசாங்கம் தற்போது ஆலோசனைகளை நடத்தி வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, தற்சமயம் வேறு அமைச்சரவை மாற்றங்கள் எதுவும் திட்டமிடப்படவில்லை என அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
இருப்பினும், தற்போதைய அமைச்சரவையில் உள்ள ஒருவரை இந்தப் பதவிக்குத் தேர்வு செய்தால், அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுவது நிச்சயம்.
“தற்போது அமைச்சரவையில் உள்ள ஒருவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டால், இருவருக்கு இடையே அமைச்சுப் பொறுப்புகள் மாற்றப்பட வேண்டியிருக்கும் என்பதால், அது ஒரு சிறிய அளவிலான அமைச்சரவை மாற்றத்தைத் தூண்டும்,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
முன்னதாக அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் அனுர கருணாதிலக்க ஆகியோர் தமது அமைச்சுப் பொறுப்புகளை மாற்றிக் கொண்டபோதும் இவ்வாறானதொரு மாற்றம் அமைச்சரவையில் நிகழ்ந்தது.
நிலக்கரி இறக்குமதியில் திரு. ஜயகொடி எந்த மோசடியும் செய்யவில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.