இளைஞர் கைப்பந்து (Volleyball) பயிற்சியாளர் மற்றும் நடுவர் (Referee) ஒருவருடன் தொடர்புடைய விசாரணை ஒன்றில் புதிய தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் மேலதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் (Complainants) எவரேனும் உள்ளார்களா என்று எட்மன்டன் காவல்துறை தேடி வருகிறது.
33 வயதுடைய ஸ்டீவன் கப்றால் (Steven Cabral) என்பவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் பொருட்களை (Child sexual abuse and exploitation material) கடத்தியமை, வைத்திருந்தமை மற்றும் அணுகியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த 2025 மே மாதத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 15, 2026 அன்று, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டை கப்றால் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கான தண்டனை விபரங்களை அறிவிக்கும் விசாரணை எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
12 முதல் 17 வயதுக்குட்பட்ட வீரர்களைக் கொண்ட எட்மன்டன் இளைஞர் கைப்பந்து அணிகளுக்குக் கப்றால் பயிற்சியாளராகவும் நடுவராகவும் பணியாற்றியுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே, மேலும் பல தனிநபர்கள் இவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
16 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடைய எவரையும் தொடர்பு கொள்ளக் கூடாது என்ற தடை உட்படப் பல கடுமையான நிபந்தனைகளின் கீழ் கப்றால் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தாங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பும் எவரேனும், அல்லது இது தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்கள் அல்லது கப்றால் தனது பிணை நிபந்தனைகளை மீறுவதைக் கண்ட சாட்சிகள் யாராவது இருந்தால், அவர்கள் 780-423-4567 என்ற எண்ணில் எட்மன்டன் காவல்துறையையோ அல்லது மொபைல் போனில் இருந்து #377 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அநாமதேயமாகத் தகவல்களை வழங்க விரும்புவோர் ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) அமைப்பை 1-800-222-8477 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.