டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது விடுத்துள்ள மிகக் கடுமையான மற்றும் ஆவேசமான மிரட்டல்களைத் தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளன.
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் உலக எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடுவதாக அச்சுறுத்தியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ட்ரம்ப்பின் ஆவேசமான பதிவு (Truth Social): ஞாயிற்றுக்கிழமை ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் மிகவும் கடுமையான மற்றும் ஆவேசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:
“செவ்வாய்க்கிழமை ஈரானில் ‘மின் உற்பத்தி நிலைய நாள்’ மற்றும் ‘பாலங்கள் நாள்’ என அனைத்தும் ஒன்றாக நடக்கும். அது போன்ற ஒரு அழிவை இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்!!! அந்த சனியன் பிடித்த ஜலசந்தியைத் திறந்து விடுங்கள் (Open the F***in’ Strait), இல்லையெனில் நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும் – இதோ பாருங்கள்!
இதனைத் தொடர்ந்து அவர், “செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணி (அமெரிக்க நேரம்)” என்ற இறுதி எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
எண்ணெய் சந்தையில் தாக்கம்: இந்த மிரட்டல் வெளியானதும் ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 110 டொலர் வரை எகிறியது. உலக எரிசக்தி விநியோகத்தில் 20% இந்த சிறிய கடல் பகுதி வழியாகவே நடப்பதால், இது தொடர்ந்தால் உலகளாவிய பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போகும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஈரானின் பதிலடி: ஈரானிய இராணுவ ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாடி, ட்ரம்ப்பின் இந்த மிரட்டலை “மூர்க்கத்தனமானது மற்றும் சமநிலையற்றது” என்று சாடியுள்ளார். “அமெரிக்கத் தலைவருக்கு நரகத்தின் கதவுகள் திறக்கப்படும்” என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஞாயிற்றுக்கிழமை குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் ஆலைகள் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கை: இவ்வளவு பதற்றங்களுக்கு மத்தியிலும், அமெரிக்கா, ஈரான் மற்றும் பிராந்திய மத்தியஸ்தர்களுக்கு இடையே 45 நாட்கள் போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ‘Axios’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் இன்று (திங்கட்கிழமை) ஒரு உடன்பாடு எட்டப்பட “நல்ல வாய்ப்பு” இருப்பதாக ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் “அனைத்தையும் தகர்த்துவிட்டு எண்ணெயை எங்கள் கட்டுப்பாட்டில் எடுப்போம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.