இஸ்ரேல், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள் உலகளாவிய மனித உரிமைகளை அழிப்பதில் முன்னணியில் இருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) கடுமையாகச் சாடியுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தனது வருடாந்த அறிக்கையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோரை “வெறிபிடித்த வேட்டைக்காரர்கள்” என அந்த அமைப்பு வர்ணித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் அதிரடியாக துப்பாக்கிச்சூடு நடத்திய ஈரான்! பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில் தொடரும் பதற்றம்
இந்தத் தலைவர்களின் நடவடிக்கைகள், மற்ற நாடுகளும் இதேபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடத் தூண்டுதலாக அமைவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் அழிவுகளுக்குப் பிறகு 80 ஆண்டுகளாகப் பேணப்பட்டு வந்த சர்வதேச ஒழுங்குமுறை, கடந்த 2025 ஆம் ஆண்டில் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளதாக அம்னெஸ்டியின் தலைவி ஆக்னஸ் காலமார்ட் தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை, உக்ரைனில் ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் மற்றும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆகியவை சர்வதேச சட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதற்கு முக்கிய உதாரணங்களாகக் காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக, பாலஸ்தீன ஆதரவு இயக்கங்களை ஒடுக்குவதில் பிரித்தானியா போன்ற நாடுகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த இருண்ட சூழலிலும் சில நம்பிக்கைக் கீற்றுகள் தென்படுவதாக அம்னெஸ்டி குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கில் பல நாடுகள் இணைவது, ஆப்கானிஸ்தானின் தாலிபான் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிடியாணை பிறப்பித்தது மற்றும் உலகெங்கிலும் இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஆகியவை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான “எதிர்ப்பின் அடையாளங்களாக” அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.