பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், சனிக்கிழமை ஒட்டாவாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரானில் கடந்த 43 நாட்களாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். “ஈரான் மக்கள் இணைய முடக்கத்தின் கீழ் இருக்கும் 43-வது நாள் இன்று” என ‘ஈரான் ரிவைவல் ஹப்’ (Iran Revival Hub) அமைப்பின் இணை நிறுவனர் சூரெனா நூரி தெரிவித்தார்.
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கியுள்ள இந்த நடவடிக்கை பாதியிலேயே நிறுத்தப்படக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
நிவாரணம் அல்ல, விடுதலை: ஈரானியத் தலைவர்களுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, தற்போதைய ஆட்சியையே தொடர அனுமதிப்பது தீர்வாகாது என அவர்கள் கவலை தெரிவித்தனர். “ஒரு உடன்பாடு எட்டப்பட்டாலும் கூட, அங்கு எதுவும் இயல்பு நிலைக்குத் திரும்பாது. அவர்கள் மக்களைத் தூக்கிலிட்டு வருகிறார்கள்” என நெகர் மொவஹேதி என்ற ஆர்ப்பாட்டக்காரர் தெரிவித்தார்.
பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் 3,000 பேரும், லெபனானில் 2,020 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் பாரசீக வளைகுடா பகுதி உலகப் பொருளாதாரத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதால் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
ஈரானிய மக்கள் ஒரு சுதந்திரமான நாட்டையும், தங்களின் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தைப் பிரதிபலிக்கும் சொந்த அரசாங்கத்தையும் விரும்புவதாகவும், அதற்கு அமெரிக்காவின் உதவி மிகவும் அவசியம் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.